உள்ளாட்சித் தேர்தல்: தேமுதிகவினர் விண்ணப்பிக்க விஜயகாந்த் அழைப்பு- கூட்டணி யாருடன் தெரியுமா?
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க.வின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்கள் 21ம்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் அதற்குரிய விண்ணப்பங்களை கொடுக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சியினர் விருப்பமனு அளிக்கத் தொடங்கியுள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்தும் விருப்பமனு அளிக்கலாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க.வின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்கள் 21ம்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் அதற்குரிய விண்ணப்பங்களை கொடுக்கலாம் 30ம்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்
மாவட்டம் தலைமை அலுவலகங்கள்
சென்னை மாநகராட்சி, மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் தலைமை கழகத்தில் வழங்கப்படும்.
பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகங்களில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி மாவட்டங்களுக்கு உரிய பொறுப்பாளர்களிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
யாரிடம் கொடுக்கலாம்
வேலூர் மத்தியம், கிழக்கு, மேற்கு- இளங்கோவன், சென்னை வடக்கு, மத்தியம், தெற்கு, மேற்கு-எல்.கே.சுதீஷ் , மீஞ்சூர் சேகர்,
திருவண்ணாமலை வடக்கு, தெற்கு- வெங்கடேசன். திருச்சி மாநகர், தெற்கு- செல்வ.அன்புராஜ், தூத்துக்குடி வடக்கு, தெற்கு-முருகநாதன், செல்வ ராஜ்,தேனி-சிங்கை.சந்துரு, தஞ்சாவூர் தெற்கு- சுப மங்கள டில்லிபாபு, ஜான்சி ராணி,திருவாரூர்-சுபாரவி.
கட்டணம் எவ்வளவு?
போட்டியிட விரும்பும் பதவி கட்டணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு 3 ஆயிரம் ரூபாயும்,
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் அளிப்பவர்கள் 3 ஆயிரம் ரூபாயும், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 1000 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
கூட்டணி யாருடஙன்
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. தேர்தலில் படுதோல்வி அடைந்ததும், மேலும் பலர் கட்சியில் இருந்து வெளியேறினர். இதனால், கட்சியில் உள்ள நிர்வாகிகள் பலரும், 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டாம்; மக்கள்நலக்கூட்டணியை கைகழுவுங்கள் என, கட்சித் தலைவர் விஜயகாந்திடம், வலியுறுத்தி வருகின்றனர்.
மக்கள் நலக்கூட்டணி
உள்ளாட்சி தேர்தலில், தே.மு.தி.க.போட்டியிடும் என, சமீபத்தில், விஜயகாந்த் அறிவித்தார். இருப்பினும், வேட்பாளர்களை தேடி பிடிக்க வேண்டிய நிலை உள்ளதை உணர்ந்த அவர், வேறு வழியின்றி, மக்கள் நலக்கூட்டணியை தொடர விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.