தமிழகத்தில் பாஜக வெற்றிக்கூட்டணி அமைத்துள்ளது: பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழகத்தில் பாஜக தலைமையில் வெற்றிக்கூட்டணி அமைந்துள்ளது என்று அக்கட்சியின் மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தேமுதிக உடன் தொகுதி பங்கீடு பங்கீடு பேச்சுவார்த்தை பாஜக அலுவலகத்தில் 2 வது நாளாக நடைபெற்றது. இரண்டு நாட்களில் தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்படும் என்று அக்கட்சியின் மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., ஐ.ஜே.கே., கொங்குநாடு கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் ஒரு முஸ்லிம் கட்சியும் இதில் இணைந்துள்ளது.
வியாழக்கிழமையன்று பாஜகவில் இணையப் போவதாக தே.மு.தி.க.வும், பாமகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. இதையடுத்து கூட்டணி உறுதியானது.
பா.ஜனதா கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்து கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
பா.ம.க., தான் போட்டியிடுவதாக அறிவித்த சில தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு விட்டுக் கொடுக்க முன்வந்ததை தொடர்ந்து கூட்டணி தேக்க நிலை முடிவுக்கு வந்தது.
பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 14 தொகுதியும், பா.ம.க.வுக்கு-8, ம.தி.மு.க.வுக்கு-5, பா.ஜனதாவுக்கு-8, ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு கட்சி, முஸ்லிம் அமைப்பு ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிவீதம் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
சனிக்கிழமையான இன்று இரண்டாவது நாளாக பா.ஜனதா தே.மு.தி.க. இடையே பேச்சுவார்த்தை நீடித்தது. இதற்காக இன்று காலை தே.மு.தி.க. நிர்வாகிகள் எல்.கே.சுதீஷ், எம்.எல்.ஏ.க்கள் மோகன்ராஜ், சந்திரகுமார், பாலாஅருள் செல்வன், மாவட்ட செயலாளர்கள் யுவராஜ், பாண்டியன் ஆகியோர் பா.ஜனதா அலுவலகம் சென்றனர்.
அவர்களை பா.ஜனதா நிர்வாகி மோகன்ராஜூலு சால்வை அணிவித்து வர வேற்றார். மகளிர் அணியினர் தாமரைப் பூ கொடுத்து வரவேற்றனர். பா.ஜனதா அலுவலகத்தில் உள்ள பாரத மாதா சிலைக்கு தே.மு.தி.க.வினர் மாலை அணிவித்தனர். காலை 8.45 மணிக்கு பேச்சு வார்த்தை தொடங்கியது.
இதில் பா.ஜனதா தரப்பில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கே.என்.லட்சுமணன், மோகன்ராஜூலு, சரவண பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொகுதி பங்கீடு மற்றும் தொகுதிகள் அடையாளம் காண்பது ஆகியவைப்பற்றி பேசப்பட்டது.
இரண்டு நாட்களில் முடிவு
பேச்சு வார்த்தைக்குப்பின் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் தலைமையிலான குழுவினர் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக இன்று வந்தனர். முறையாக கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை தொடங்கி இருக்கிறோம். எல்லாம் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கிறது விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
வெற்றிக்கூட்டணி
எங்கள் கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஏற்றுக் கொண்டு முழுமைபெற்ற கூட்டணியாக வெற்றிக்கூட்டணியாக எங்கள் கூட்டணி அமைந்துள்ளது என்றும் கூறினார்.
முரண்பாடு இல்லை
அப்போது பொன்.ராதாகிருஷ்ணனிடம் உங்கள் கூட்டணியில் முரண்பட்ட கட்சிகள் உள்ளதாகவும், இது முரண்பாடாக இருக்கும் என்றும் கூறப்படுகிறதே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அது முரண்பட்டவர்கள் கூறும் முரண்பாடான குற்றச்சாட்டு. அனைவரும் இணைந்து தேர்தல் பணி ஆற்றுவோம்? என்றார்.
தேமுதிக விற்கு எந்த தொகுதி
பேச்சு வார்த்தை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ் கூறியதாவது: தே.மு.தி.க., பாஜக உடனான கூட்டணி ஏற்பட்டதை தொடர்ந்து நேரடி பேச்சு நடத்துவதற்காக எங்கள் தலைவர் எங்களை பா.ஜனதா அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். பேச்சு வார்த்தையின் போது தொகுதி பங்கீடு கூட்டணி பற்றி விரிவாக பேசினோம். எந்தெந்த தொகுதி என்பது 2 நாளில் முடிவாகும். அதன்பிறகு எங்களுக்கு எத்தனை தொகுதி எந்தந்த தொகுதி என்ற விவரங்களை அறிவிப்போம். இந்த கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டணி. வெற்றிக் கூட்டணியாக அமையும் என்றார்.
பாமக உடன் பேச்சு
வெள்ளிக்கிழமை பகல் 1.30 மணிக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் பாஜக அலுவலகத்துக்கு சென்று முறைப்படி பேச்சு நடத்தினார்கள். இதில் ஜி.கே.மணியுடன் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு ஜி.கே.மணியிடம் நிருபர்கள் கேட்ட போது, அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மதிமுக உடன் எப்போது?
தே.மு.தி.க., பா.ம.க. வுடனான பேச்சு வார்த்தை முடிந்த பின்னர் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக குழுவினர் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.