தேமுதிகவிடமிருந்து சாதகமான பதில் வந்துள்ளது.. காங்.குடன் இணையாது- இல.கணேசன்
கிருஷ்ணகிரி: தேமுதிகவிடமிருந்து எங்களுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது. கண்டிப்பாக அக்கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைக்காது என்று கூறியுள்ளார் இல.கணேசன்.
இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது. அதிக தொகுதிகளை தேமுதிக கேட்பதால் ஷாக்காகிக் கிடக்கிறது பாஜக என்கிறார்கள். இந்த நிலையில் அக்கட்சியிடமிருந்து சாதகமான பதில் வந்துள்ளதாக கூறியுள்ளார் இல.கணேசன்.
மேலும் இதேபோல அதிக சீட் கேட்டு அடம் பிடித்து வரும் பாமகவுடனும் அதிகாரப்பூர்வற்ற முறையில் பேசிக் கொண்டிருக்கிறதாம் பாஜக.
கிருஷ்ணகிரிக்கு நேற்று வந்த இல.கணேன் அங்கு செய்தியாளர்களிடம் பேசியதாவது..
2 மாதமாக பேசினோம்
தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாத கட்சிகளுடன் கடந்த 2 மாதங்களாக அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம்.
சிலருடன் அதிகாரப்பூர்வமாகவும் பேசினோம்
அதைத் தொடர்ந்து சில கட்சிகளுடன் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையும் நடத்தினோம்.
மோடி வருவதற்குள்
இந்த நிலையில் 8-ந்தேதி மோடி சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டதால், அதற்குள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை சுமுகமாக முடித்து, ஒரே மேடையில் அனைத்து தலைவர்களையும் ஏற்றி தேர்தல் பிரசாரத்தை தொடங்கலாம் என வியூகம் வகுத்தோம். ஆனால் அதில் முடிவு எட்டப்படவில்லை.
தொடர்ந்து பேசுகிறோம்
இந்த நிலையில் ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அவசரப்பட விரும்பவில்லை
ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தமிழகத்தில் கூட்டணி அமைப்பதில் பா.ஜ.க அவசரம் காண்பிக்காது. தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாத வலிமையான கூட்டணி அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
பாசிட்டிவ் பதில்
பா.ஜ.க கூட்டணியில் தேமுக வருவதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்பே இல்லை.
பாமகவுடனும் தொடர்ந்து பேச்சு
பாமகவுடனும் தொடர்ந்து அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
போட்டி எங்களுக்குத்தான்
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு, காங்கிரசுக்கும் இடையே தான் உண்மையான போட்டி உள்ளது.
திமுக - அதிமுகவைத் திட்ட மாட்டோம்
எனவே அதிமுக மற்றும் திமுக கட்சிகளை விமர்சனம் செய்து பிரசார வியூகம் வகுக்கப்படாது. இந்த தேர்தல் தேசிய கட்சிகளுக்கு இடையிலான மோதலாகும்.
3வது அணி வந்தால் பரிதாபமாகி விடும்
இந்த தேர்தலில் 3-வது அணி அமைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அவ்வாறு அமைந்தாலும் அந்த அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை. இருப்பினும் வெற்றி பெற்றாலும் யாரை பிரதமராக தேர்வு செய்வார்கள் என்பது மிக முக்கிய கேள்வியாகும். நாடு உள்ள நிலையில் 3-வது அணி வெற்றி பெற்றால் நாட்டின் நிலை மிகவும் பரிதாபமாகி விடும். எனவே 3-வது அணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார் அவர்.--