மதுக் கடைகளைத் திறப்பதை எதிர்த்து தேமுதிக தீர்மானம்- மாநில மாநாடு நடத்தவும் முடிவு
சென்னை: தமிழகத்தில் மதுக் கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம் போடப்பட்டது. மொத்தம் 19 தீர்மானங்கள் போடப்பட்டன. விழுப்புரத்தில் மாநில மாநாடு நடத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சென்னை அருகே பொன்னேரியில் ஒரு கல்யாண மண்டபத்தில் தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்தது. இக்கூட்டத்தில் லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கியமாக ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் 19 தீர்மானங்களைப் போட்டு நிறைவேற்றினர். அதன்படி பிப்ரவரி 2ம் தேதி விழுப்புரத்தில் தேமுதிக மாநில மாநாட்டை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் மதுக் கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானங்களில் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கட்சியின் தலைமை நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க் கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அனைவருடனும் கூட்டணி தொடர்பாக தலைவர் விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிக பொதுக்குழு - செயற்குழு தீர்மா்ன விவரங்கள்
- லோக்சாப தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக முடிவெடுக்க ஒரு குழுவும் அமைக்கப்படுகிறது.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்ந்து சீர்கெட்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது.
- தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சினையைத் தீர்க்க உடனடி, விரைவு நடவடிக்கை தேவை.
- மறைமுகமாக உயர்த்தப்பட்ட பாலின் விலை உயர்வைக் குறைக்க வேண்டும்.
- கோமாரி நோயால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும்.
- விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்க வேண்டும்.
- இலங்கைப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும்.
- தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.
- சமையல் எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
- பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தக் கூடாது.
- கொடநாட்டிலிருந்து ஜெயலலிதா நிர்வாகம் செய்வதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது. இது கண்டனத்துக்குரியது.
- மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படாதது கண்டனத்துக்குரியது.
- அதிமுகவினரின் லஞ், ஊழல் நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது.