சட்டசபை தேர்தல் வெற்றிக்காக விஸ்வாமித்திரர், சுப்ரமணியரை வழிபட்ட விஜயகாந்த்
தூத்துக்குடி: அரசியல் வாழ்வில் வெற்றியை பெறவும், தோஷங்கள் நீங்கவும் விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவிலில் நவ அபிஷேக பரிகார பூஜையும், யாகமும் நடத்தியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இந்த பரிகார பூஜை செய்தால் 64 விதமான தோஷங்கள் தீரும், பல ஜென்ம பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை. அதோடு வழக்குகளில் இருந்து விடுதலை பெறவேண்டியும் விஜயகாந்த் இங்கு வழிபாடு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோபம் குறையவேண்டி யாகம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் வெற்றிக்காகவே வழிபாடு நடத்தியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலிலும், மதுரை திருமங்கலம் அருகே உள்ள குலதெய்வ கோவிலிலும் விஜயகாந்த் சிறப்பு வழிபாடுகளை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஸ்வாமித்திர மகரிஷிக்கு கூடங்குளம் அருகே உள்ள விஜயாபதி என்ற கிராமத்தில் கோவில் அமைந்துள்ளது. சகல பாவங்களையும் போக்கும் ஸ்தலமாகவும், தீராத பிரச்சினைகள் தீர்க்கும் ஸ்தலமாகவும் இக்கோவில் விளங்கி வருகிறது.
அதிக கோபக்கார முனிவரான விஸ்வாமித்திரர் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர், இறைவனுக்குப் போட்டியாக தனது நண்பன் திரிசங்குவிற்கு சொர்க்கத்தைப் படைத்த காரணத்தால் தன்னுடைய தவசக்தியை முற்றிலும் இழந்தார் விஸ்வாமித்திர மகரிஷி அந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி. இங்கு தனது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரத சக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய ராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு வந்தார் விஸ்வாமித்திரர்.
அந்தக் காலத்தில் தில்லை மரங்கள் நிறைந்த வனப்பகுதியாகும். அருகில் கடற்கரை அமையப் பெற்ற இடம் இதுவாகும். தன்னுடைய தவத்தைத் தொடங்க தன்னுடைய இஷ்ட தெய்வமான பராசக்தியான தில்லை மகா காளியை சிதம்பரத்தில் இருந்து அழைத்து வந்து கடற்கரை ஓரத்தில் பிரதிஷ்டை செய்தார். மேலும், தவத்தின்போது இரவு, பகல் பாராமல் பசி, தூக்கம் தெரியாமல் இருக்க வேண்டி ராமர், லட்சுமணருக்கு பலா அதிபலா என்ற மந்திரத்தை குரு உபதேசம் செய்தார். இதன் மூலம் தன் இழந்த சக்தி மற்றும் பிரம்மரிஷி பட்டத்தை பெற்றார்.

பாவங்கள் தீரும்
விஜயபதியில் விஸ்வாமித்திர மஹரிஷியின் சூட்சும சமாதியும் தில்லைக்காளி கோவிலும் உள்ளது. இந்த கோவிலில் நடத்தப்படும் நவ அபிஷேக பரிகார பூஜையில் நமது 64 விதமான தோஷங்கள் தீர்க்கப்படுகிறது. பல ஜென்ம பாவங்களும் தீர்க்கப்படுகிறது. இங்கு நீராடி இங்குள்ள சிவன், வினாயகர், முருகன், காளி, விஸ்வாமித்திரரை வழிபட்டால் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடையாத நம் வீட்டின் கன்னி தெய்வங்கள் போன்றோரின் ஆத்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை

பிரச்சினைகள் தீரும்
இங்குள்ள கடலில் நீராடி விநாயகர், காளி, சிவனை வணங்கி பின்புறம் உள்ள விஷ்வாமித்திரர் சித்தர் பீடத்தில் ராஜராஜேஸ்வரி பீடத்தில் அவரவர் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதிக்கு உரிய எண்ணிக்கையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாக்குபலிதம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
மூன்று பெளர்ணமிக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டால் தீராத பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து, தோஷங்கள் நோய்கள் நீங்கி நலம் பெறுவர் என்பது நம்பிக்கை.

விஜயகாந்த் பிறந்தநாள்
வரும் 25ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் சமயத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு விஜயபதி சென்று விஸ்வாமித்திரருக்கு சிறப்பு யாகம் நடத்தியதோடு தியானமும் இருந்தார்.

குடும்ப ஜோதிடர் ஆலோசனை
விஜயகாந்த் மீது தமிழக அரசு பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளில் இருந்து வெற்றி பெற விஜயாபதி கோயிலில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என குடும்ப ஜோதிடர்கள் தெரிவித்ததாகவும், அதன் பேரிலேயே விஜயகாந்த் இங்கு வந்து வழிபாடு செய்ததாகவும் விஸ்வாமித்திர ஆலயத்தில் பூஜை நடத்தி வரும் முத்து பட்டர், தெரிவித்தார்.

திருச்செந்தூர் முருகன் தரிசனம்
ஒரு மணி நேரம் கோயிலில் இருந்த அவர் அங்கிருந்து திருச்செந்தூர் புறப்பட்டு சென்றதாகவும், அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரனை சம்ஹாரம் செய்த சுப்ரமணியரை வழிபட்டால் எதிரிகளை எளிதில் வெல்லலாம் என்றும் ஜோதிடர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

குலதெய்வ வழிபாடு
காலை 6 மணிக்கு காரில் மதுரை அருகே திருமங்கலத்தில் அமைந்திருக்கும் அவரது குலதெய்வ கோயிலுக்கு சென்று அங்கும் வழிபாடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications