பூரண மதுவிலக்கு கோரி விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரதம்: தேமுதிகவினர் பங்கேற்பு
சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது தொண்டர்களுடன் சென்னையில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி உள்ளார்.
தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, தே.மு.தி.க. சார்பில் கடந்த 6 ஆம் தேதி தடையை மீறி தமிழகம் முழுவதம் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் உள்ளிட்ட தே.மு.தி.க.வினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில், பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோ, இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ், கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், தே.மு.தி.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தே.மு.தி.க. தொண்டர்கள், பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.