ஆள் வைத்து வழிப்பறி 'பிசினஸ்'.. தேமுதிக பிரமுகர் உள்பட 11 பேருக்கு கைக்காப்பு!
திருப்பூர்: ஆட்களை நியமித்து வழிப்பறிக் கொள்ளையை நடத்தி வந்த தேமுதிக பிரமுகர் உள்பட 11 பேரை திருப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக தொடர்ந்து வழிப்பறிச் சம்பவங்கள் நடந்து வந்தன. இதுகுறித்து போலீஸுக்குப் புகார்கள் குவிந்தன. இதையடுத்து பல்வேறு தனிப்படைகளை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் உடுமலை, தாராபுரம் சாலையில், போலீஸார் வாகனச் சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும்,தங்க நகைகள், முகமூடிகள் உள்ளிட்டவைகளும் காரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, காரில் வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த சிவா(28), முருகேசன்(27), முருகன் (36), ரமேஷ்(29), அலெக்ஸ்(21), திருச்சியைச் சேர்ந்த பூபதி(36), சுரேஷ்குமார்(30) ஆகியோரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் நடந்த பல்வேறு கொள்ளை சம்பவங்களில் இவர்களுக்கு நேரடியான தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், உடுமலையை அடுத்துள்ள மலையாண்டிபட்டிணம் கிராமத்தில் இவர்கள் வீடு எடுத்து தங்கி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இவர்களுக்கு உதவி செய்ததாக உடுமலை சரவணன், ரவிக்குமார், சுப்பிரமணியம்ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், இவர்கள் அனைவருக்கும் மூளையாக இருந்து செயல்பட்டதாக தேமுதிக திருப்பூர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் கல்லு பாலன்(எ)பாலசுப்பிரமணியம் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.
கல்லு பாலன் பல தொழில்களை நடத்தி வருகிறார். சில ஆண்டுகலுக்கு முன்பே இவர், நாகரத்தினக் கல் மோசடி உள்பட பல வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டவர் ஆவார். இப்போது ஆள் வைத்து வழிப்பறியை பிசினஸ் போல நடத்திக் கைதாகியுள்ளார்.