"அதிமுகவின் வா.செ. = தேமுதிகவின் கொ.ப.செ": இப்படித்தான் இன்று சட்டசபையில் நடந்தது விவாதம்!
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று மிக முக்கியமான விவாதம் ஒன்று நடந்தது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு அமைச்சர்களும், தேமுதிக உறுப்பினர்களும் சிறப்பித்தனர்.
அதாவது இன்று தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. விவாதத்தை எதிர்க்கட்சி என்ற முறையில் தேமுதிகவின் தினகரன் தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், என்னை போன்ற இளைஞர்களையும் உருவாக்கி எம்.எல்.ஏ. பதவியில் அழகு பார்க்கும் கட்சி தலைவர் கேப்டனுக்கு நன்றி என்று கூறி பேசத் தொடங்கினார். அவர் அப்படி ஆரம்பித்துதான் தாமதம்.. அமைச்சர்கள் பிடித்துக் கொண்டனர்.
அதன் பிறகு நடந்த வாதம், விவாதம், கோபம், ஆக்ரோஷம், சவால் ஆகியவை பின் வருமாறு....

எங்க அம்மாதான் அழகு பார்ப்பாங்க
அமைச்சர் வளர்மதி: இளைஞர்களை உருவாக்கி வைத்துள்ள தலைவர் என்று அவரது தலைவரை பற்றி பேசுகிறார். இளைஞர்- இளம்பெண்கள் பாசறை என 35 லட்சம் பேரை உருவாக்கி வைத்துள்ள எங்கள் கட்சியின் தலைவி எங்கள் அம்மா. இளைஞர்களை எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்களாக்கி அழகு பார்ப்பவர் எங்கள் அம்மா. இளைஞர்கள், இளம் பெண்களுக்கு உரிய மரியாதையை தருபவர் புரட்சித் தலைவியை தவிர இந்தியாவில் வேறு யாரும் இல்லை.

அப்புறம்தானே தொடங்கினீர்கள்
சந்திரகுமார் (தே.மு.தி.க கொறடா.) இளைஞர்-இளம் பெண்கள் பாசறையை அ.தி.மு.க.வில் உருவாக்கியது உண்மை. ஆனால் 2005-ல் தே.மு.தி.க.வை உருவாக்கிய பிறகுதான் உங்கள் கட்சியில் (அ.தி.மு.க.) இந்த அமைப்பையே தொடங்கினீர்கள்.

அம்மாவைப் பார்க்கத்தானே கட்சியே தொடங்கினீர்கள்
அமைச்சர் வளர்மதி: எங்கள் கட்சியில் அதற்கு முன்பே இளைஞர் அணி இருந்தது. எங்கள் அம்மாவை பார்க்கத்தான் நீங்கள் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறீர்கள்.

அப்படீன்னா.. நத்தம் புது விளக்கம்!
அமைச்சர் நத்தம் விசுவநாதன்: இங்கு பேசும் சந்திரகுமார் இதற்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்தவர். வார்டு செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்பதால் தே.மு.தி.க.வுக்கு சென்று கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறார். அப்படியானால் எங்கள் கட்சியில் வார்டு செயலாளர் பதவி தே.மு.தி.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்கு சமம்.

அட என் பேரே விஜயகாநத் சொக்கலிங்கம் சந்திரகுமாருங்க!
சந்திரகுமார்: 1981-ல் இருந்து அ.தி.மு.க.வில் இருந்தாலும் விஜயகாந்தின் ரசிகர் மன்றத்தில் தீவிரமாக பணியாற்றி அதை வளர்த்தேன். எனது பெயரே விஜயகாந்த் சொக்கலிங்கம் சந்திரகுமார்தான்.

கொடியேற்றி வளர்த்தேன்
நான் அ.தி.மு.க.வில் இருந்தாலும் கேப்டனின் பின்னால் இருந்து கொடியேற்றி ரசிகர் மன்றத்தை வளர்த்ததால்தான் தே.மு.தி.க.வுக்கு சென்ற பிறகு என்னை கொள்கை பரப்பு செயலாளராக அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அவரும் துரோகி.. இவரும் துரோகி.. எல்லாருமே துரோகிங்கதான்!
அமைச்சர் வளர்மதி: எந்தந்த கட்சியில் இருந்தார் என்று சந்திரகுமார் கூறினார். அப்போதே இவர் துரோகம் செய்து பழக்கப்பட்டவர். இவர் மட்டுமின்றி இவரது தலைவரும் துரோகம் செய்து பழக்கப்பட்டவர். அவரை போலவே தொண்டரும் இருக்கிறார்.

கடும் வாதம்
வளர்மதி இப்படிக் கூறியதும் தேமுதிக எம்.எல்.ஏக்கள் கொந்தளித்து விட்டனர். கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து விளக்கம் அளிக்க அனுமதி கோரினர். சபாநாயகர் தனபாலுடன், தேமுதிக துணைத் தலைவர் மோகன்ராஜு கடும் வாதம் புரிந்தார்.

யாரு துரோகி...
சந்திரகுமார்: துரோகம் இழைத்ததாக எங்களை பார்த்து கூறுகிறார். எந்த இடத்திலும் யாருக்கும் துரோகம் செய்த பழக்கம் எங்களுக்கு கிடையாது.

நாங்க சுயம்பு!
மோகன்ராஜ் (தே.மு.தி.க.): மானியக் கோரிக்கை விவாதத்தின்போது திசை திருப்புவது அமைச்சர்கள் தான். எங்கள் கட்சி தலைவர் சுயமாக கட்சியை ஆரம்பித்தவர். எந்த கட்சியில் இருந்தும் வந்தவர் அல்ல என்றார்.
இப்படி நீடித்தது விவாதம்!












Click it and Unblock the Notifications