அதிமுகவில் முறைப்படி ஐக்கியமாகும் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்.. !
சென்னை: தேமுதிக எம்.எல்.ஏக்களாக பதவியில் ஒட்டிக் கொண்டே அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 8 தேமுதிக அதிருப்தியாளர்களும் விரைவில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேரவுள்ளனராம்.
சட்டசபையின் பதவிக்காலம் முடியும் தருவாயை நெருங்கி விட்டதால் எட்டு பேரையும் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சியில் வந்து அதிகாரப்பூர்வமாக இணையுமாறு ஜெயலலிதா கூறி விட்டாராம். இதனால் எட்டு பேரும் விரைவிலேயே ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணையவுள்ளனராம்.
மேலும் இந்த எட்டு பேருக்கும் மீண்டும் சீட் தரப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
உடைந்த தேமுதிக
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விரட்டப்பட்ட நிலையில் அக்கட்சி உடைந்தது. அதிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட 9 எம்.எல்.ஏக்கள் விலகி தனி அணியாக மாறினர்.
அதிமுகவில் சேர்ந்த பண்ருட்டியார்
மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் தனது ஆலந்தூர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவில் முறைப்படி இணைந்து கொண்டார். மற்ற எட்டு பேரும் எம்.எல்.ஏக்களாக நீடித்தபடி அதிமுக ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
முறைப்படி இணைய சம்மதம்
இந்த நிலையில் இந்த எட்டு பேரையும் விரைவில் கட்சியில் இணைக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாம். சட்டசபை ஆயுள் காலம் முடியப் போவதால் இவர்களை கட்சியில் சேர்ந்து விடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
ஜெ. முன்னிலையில்
விரைவில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இந்த எட்டு பேரும் அதிமுகவில் இணைவார்களாம். நேற்று சட்டசபை வளாகத்தில் முதல்வர் ஜெயலலிதாவையும் இந்த எட்டுப் பேரும் அவரது அறையில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
சீட் கிடைக்குமா?
இந்த எட்டு பேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. இருப்பினும் சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
எப்படியோ தனி்த் தீவாக தத்தளித்துக் கொண்டிருந்த இவர்களுக்கு ஒதுங்க ஒரு கரையும், முறைப்படியான கரை வேட்டியும் கிடைக்கப் போவது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நம்புவோம்.