4 தேர்தல்கள்... 2 'சோலோ'.. 2 கூட்டணி.. விஜயகாந்த் கடந்து வந்த பாதை!
சென்னை: தேமுதிக இதுவரை சந்தித்த நான்கு தேர்தல்களில் 2 முறை தனித்துப் போட்டியிட்டது. ஒருமுறை அதிமுகவுடனும், ஒருமுறை பாஜகவுடனும் கூட்டணி அமைத்து களம் கண்டது. இப்போது 3வது புதிய கூட்டணிக்கு அது மாறவுள்ளது.
இயன்றதைச் செய்வோம் இல்லாதவருக்கே என்ற "பன்ச்" லைனுடன் மதுரையில் பிறந்த கட்சி தேமுதிக. ஆரம்பித்த சில வருடங்களிலேயே தமிழக அரசியல் களத்தில் தனித்துத் தெரிய ஆரம்பித்த கட்சியும் கூட.
அதுவரை ஒரு அணியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக வலம் வந்து கொண்டிருந்த பாமகவின் இடத்தை வெகு சீக்கிரமே பிடித்த கட்சி தேமுதிக.
2005ல் உதயம்
2005ம் ஆண்டு மதுரையில் தேமுதிகவின் பிறப்பை அறிவித்தார் விஜயகாந்த். தேமுதிக தமிழகத்தில் ஏற்படுத்தப் போகும் பாதிப்பு அப்போது யாருக்கும் தெரியவில்லை.
2006ல் முதல் போட்டி
கட்சி தொடங்கிய பின்னர் தேமுதிக சந்தித்த முதல் தேர்தல் 2006 சட்டசபைத் தேர்தல். தனித்து 234 தொகுதிகளும் அக்கட்சி போட்டியிட்டது. விஜயகாந்த் ஒவ்வொரு தொகுதிக்கும் போய் சூறாவளி பிரசாரம் செய்தார்.
ஒரே ஒரு வெற்றி
இப்படி சூறாவளியாகப் பிரசாரம் செய்தும் கூட தேமுதிகவுக்கு ஒரே ஒரு வெற்றி மட்டுமே கிடைத்தது. அதுவும் விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.
அசத்திய வாக்கு சதவீதம்
ஆனால் அவரது கட்சிக்குக் கிடைத்த வாக்கு சதவீதம்தான் அனைவரையும் அசரவைத்தது. அதாவது 10 சதவீத வாக்குகளைப் பெற்றது தேமுதிக. அக்கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 27 லட்சத்து 64 ஆயிரத்து 223 ஆகும்.
மீண்டும் சோலோ
அடுத்து 200ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல். இதிலும் தனியாகவே போட்டியிட்டது தேமுதிக. இந்த முறை 10.01 சதவீத வாக்குகளைப் பெற்றது தேமுதிக. ஆனால் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. கிடைத்த வாக்குகள் 31 லட்சத்து 26 ஆயிரத்து 117.
பாதை மாறியது
அந்தத் தேர்தலோடு தேமுதிகவின் முன்னேறப் பாதை முடிந்து போனது. அதுவரை தனிப்பெரும் சக்தியாக, மக்கள் ஆவலுடன் காத்திருந்த மாற்று சக்தியாக பார்க்கப்பட்ட தேமுதிகவின் முகம் முற்றிலுமாக மாறிப் போனது. வழக்கமான அரசியல் கட்சியாக மாறியது தேமுதிக, பத்தோடு பதினொன்றாக மாறிப் போனார் விஜயகாந்த்.. ஆம் கூட்டணி அரசியலுக்கு அவரும் மாறினார்.
முதல் கூடடணி
2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் முதல் கூட்டணியில் இணைந்தார் விஜயகாந்த். பெரும் பேச்சு, பேரத்திற்குப் பின்னர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். 41 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு 29 இடங்களில் வெற்றி கிடைத்தன.
அரசியல் அங்கீகாரம்
அதுவரை வாக்குகளை பிரித்து மட்டுமே வந்த தேமுதிக முதல் முறையாக அரசியல் ரீதியாக அங்கீகாரம் பெற்றது. எதிர்க்கட்சியாக மாறியது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
2வது கூட்டணி
ஆனால் இந்தக் கூட்டணி சீக்கிரமே சிதறிப் போனது. எதிரும் புதிருமாக மாறின அதிமுகவும், திமுகவும். இதையடுத்து 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக அணிக்குத் தாவினார் விஜயகாந்த்.
மீண்டும் முட்டை
14 லோக்சபா தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. ஆனால் எதிலுமே வெற்றி கிடைக்கவில்லை. வாக்கு சதவீதம் 5.1 சதவீதமாகக் குறைந்து போனது.
சரிந்து வரும் வாக்கு விகிதம்
தேமுதிக தனித்துப் போட்டியிட்ட இரு தேர்தல்களிலும் அதன் வாக்கு சதவீதம் சரியவில்லை. கிட்டத்தட்ட ஒரே அளவில் அதாவது 10 சதவீதமாகவே இருந்தது. ஆனால் எப்போது அவர் கூட்டணி அரசியலுக்கு மாறினாரோ அப்போதே வாக்கு சதவீதமும் குறைய ஆரம்பித்து விட்டது.
5.19 சதவீதம்தான்
10 சதவீதத்துடன் ஆரம்பித்த தேமுதிகவின் வாக்கு வங்கி தற்போது அதில் பாதியாக குறைந்து வெறும் 5.19 சதவீதமாகவே உள்ளது. இருப்பினும் ஒரு அணியின் வெற்றி வாய்ப்பை மாற்ற இதுவே போதுமானது என்பதால்தான் திமுக, தன் பக்கம் தேமுதிகவை இழுக்க எல்லா வேலைகளையும் செய்து கொண்டுள்ளது.