பாஜக மீதான பிரேமலதாவின் கோபம்... திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன?
சென்னை: பாஜகவுடன் எப்போதும் மென்மையான போக்கை கடைபிடிக்கும் தேமுதிகவின் செயல்பாடுகளில் அண்மைக்காலமாக மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளது.
அதற்கு உதாரணமாக நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடாது என அவர் தெரிவித்த கருத்து தமிழக பாஜகவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நன்மதிப்பு
கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்தித்தது தேமுதிக. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது பிரதமர் மோடி வைத்துள்ள நன்மதிப்பு காரணமாகவே கடந்த மக்களவைத் தேர்தலிலும் அந்தக் கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என நினைத்தார் அமித்ஷா. ஆனால் அதை அவரால் எளிதாக செய்யமுடியவில்லை, நீண்ட நெடிய போராட்டம், பேச்சுவார்த்தைக்கு பின்னரே தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்தது தேமுதிக.

ஏமாற்றம்
அதிமுக 5 தொகுதிகளை மட்டுமே தேமுதிகவுக்கு ஒதுக்கியபோது அதை ஏற்றுக்கொள்ளுங்கள், பார்த்துக்கொள்ளலாம் என நம்பிக்கை விதைத்தவர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல். அவரது வாக்குறுதியை ஏற்று அரைமனதோடு அந்தத் தொகுதிகளை பெற்று அனைத்திலும் தோல்வியை தழுவியது தேமுதிக. ஆனால், அதற்கு பிறகு தேமுதிகவை திரும்பிக் கூட பார்க்கவில்லை டெல்லி. அதேவேளையில் பாஜக தரப்பு ரஜினிகாந்த் புகழ்பாடத் தொடங்கியதால் தேமுதிக தலைமைக்கு அது அதிருப்தியை ஏற்படுத்தியது.

விமர்சனம்
மேலும்,தேமுதிகவுக்கு பாஜக ஒரு ராஜ்யசபா சீட் தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடக்கவில்லை. இப்படி மொத்த விவகாரமும் ஒன்று சேர்ந்ததால் கடந்த சில நாட்களாகவே தேமுதிக தலைமை பாஜக மீது வருத்தத்தில் தான் இருந்துவந்தது.

பளீர் பதில்
பாஜக மீதான தனது மன வருத்தத்தை, கோபத்தை வெளிப்படுத்த மதுரையில் நேற்று நல்ல வாய்ப்பு கிடைத்ததும் அதை பயன்படுத்திக்கொண்டார் பிரேமலதா விஜயகாந்த். பாஜகவை தேமுதிக சார்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications