2016ல் தமிழகத்தை தேமுதிகதான் ஆளும்: சொல்கிறார் விஜயகாந்த்
சென்னை: 2016ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்கும் என்று அக்கட்சியின் நிறுவனர் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதே சமயம் மத்தியில் ஆளும் பாஜக அரசை விஜயகாந்த் விமர்சிக்கவில்லை.
தேமுதிகவின் 9வது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று கோவையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய விஜயகாந்த் தமிழக அரசை கடுமையாக சாடினார்.
சேவை செய்ய வந்தேன்
நான் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன் என்றார் விஜயகாந்த். தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுக அரசிடம் தொலைநோக்குப் பார்வையில்லை என்று குற்றம் சாட்டிய விஜயகாந்த், தமிழகத்தில் எத்தனை முதல்வர்கள் உள்ளனர் என்று கேள்வி எழுப்பினார்.
செய்வீங்களா?
2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று ஆளும் கட்சியாக மாறும். தேர்தலில் ஜெயிக்க பம்பரமாக சுத்தணும் என்று கூறிய விஜயகாந்த், செய்வீங்களா? செய்வீங்களா? செய்யணும் செய்வோம் என்றார். கூட்டணி பற்றி வருங்காலத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
அனைத்திலும் லஞ்சம்
நாடு நல்லா இருக்க ஊழலை ஒழிக்கணும் என்ற விஜயகாந்த், தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்றார்.
மீத்தேன் திட்டத்தால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்றார்.
மின்சார பற்றாக்குறையில் தமிழகத்தின் மான்செஸ்டர் கோவையில் தொழில்கள் முடங்கிவிட்டன. தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பதாகவும் கவலை தெரிவித்தார் விஜயகாந்த்.
23 தீர்மானங்கள்
தேமுதிக செயற்குழு பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
காவிரியில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். முல்லைப்பெரியாறு, காவிரி நதிநீர் பிரச்சினையில் அதிமுக அரசு ஆதாயம் தேடக்கூடாது.
சி.பி.ஐ விசாரணை
ஆவின்பால் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும். ஆவின் பால் முறைகேடு விசாரணையை சி.பி.ஐயிடம் ஒப்படைக்கவேண்டும்
கூடங்குளம் புதிய அணு உலைகள் பற்றி மக்களின் அச்சத்தைப் போக்கவேண்டும்.
கர்பிணிகள், குழந்தைகள் பாதுகாப்புக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்
மதுவிலக்கு தேவை
வேலூர் உள்ளிட்ட இடங்களில் மணற்கொள்ளை தொடர்கிறது. அதை தடுக்கவேண்டும்
போக்குவரத்து சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்
தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
குற்றவாளி முதல்வரா?
ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற குற்றவாளியை மக்களின் முதல்வர் என்று அழைக்க கூடாது.
கிரானைட் கொள்ளை பற்றி விசாரிக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ்க்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும்.
பாஜகவை விமர்சிக்கவில்லை
தமிழக மீனவர்கள் விடுதலையில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது. மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகளை தேமுதிக துளியும் விமர்சிக்கவில்லை. இதனால், கூட்டணியில் நீடிக்கவே தேமுதிக விரும்புவதாக கருதப்படுகிறது.