டெங்கு: மக்களுக்கு உதவி செய்ய தொண்டர்களுக்கு விஜயகாந்த் உத்தரவு
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்றதைச் செய்வோம்... இல்லாதவர்க்கே' என்ற பாணியில் நாம் உதவிகள் வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, இன்று தே.மு.தி.க கட்சியினர் நேரில் சென்று உதவிகள் செய்ய வேண்டும்'' என அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
'தமிழகம் முழுவதும் ஆட்கொண்டிருக்கும் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தே.மு.தி.கவின் அனைத்து மாவட்டங்கள் சார்பாக, அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை, 'இயன்றதைச் செய்வோம்... இல்லாதவர்க்கே' என்ற பாணியில் நாம் உதவிகள் வழங்க வேண்டும்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் குப்பைகளை அகற்றுதல், தேங்கி நிற்கும் சாக்கடைகளை சீர்செய்தல், கொசு மருந்து தெளித்தல், அனைத்து பகுதியிலும் பிளிச்சிங் பவுடர் போடுவது போன்ற களப்பணிகளை ஆற்றவேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதாதைகள் அடித்து மக்களுக்கு விநியோகம் செய்யவேண்டும்.
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாகச் சென்று உதவி செய்யும் வகையில், திருப்பூர் மற்றும் கோவையில் பிரேமலதா விஜயகாந்த், கடலூர் மற்றும் திருவண்ணாமலையில் அவைத்தலைவர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் பொருளாளர் வி.இளங்கோவன், திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விழிப்புணர்வுகளை செய்ய வேண்டும்.
சென்னை மற்றும் திருவள்ளூரில் துணைச் செயலாளர் ப.பார்த்தசாரதி, மதுரை மற்றும் சிவகங்கையில் துணைச் செயலாளர் எஸ்.சந்திரா, சேலம் மற்றும் நாமக்கல்லில் கழக உயர்மட்டக் குழு உறுப்பினர் ஏ.ஆர்.இளங்கோவன் மற்றும் மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்டச் செயலாளர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.