அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளருக்கு அடி, உதை: முன்னாள் மேயரும் தப்பவில்லை
வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி தி.மு.க வேட்பாளரை மாற்ற கோரி ஆர்பாட்டம் நடைபெற்றதோடு தி.மு.க வேட்பாளரையும் அடித்து உதைத்துள்ளனர் போராட்டக்காரர்கள். அதோடு முன்னாள் எம்.பி., முன்னாள் மேயரும் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க வேட்பாளர் பட்டியல் புதன்கிழமையன்று வெளியிடப்பட்டது. இதில், வேலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் 10 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது. இதில் அணைக்கட்டு தொகுதி வேட்பாளராக மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நந்தகுமாரை மாற்ற வேண்டும், அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் பாபுவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என 13ம் தேதி இரவு அவரின் ஆதரவாளர்கள் அணைக்கட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதிலிருந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள் நேற்று நூற்றுக்கணக்கில் திரண்டு வேலூர் மத்திய மாவட்ட அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்த மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி வேட்பாளருமான ஏ.பி.நந்தகுமாரை சரமாரியாகத் தாக்க தொடங்கினர்.
இந்த கைகலப்பில் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான முகமது சகி, முன்னாள் மேயர் கார்த்திகேயன் ஆகியோர் சட்டை கிழிக்கப்பட்டது. அதோடு முன்னாள் அமைச்சர் துரைமுருகனையும் தகாத வார்த்தைகளால் வசைபாடினர்.
இதுகுறித்து, காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து கூட்டத்தை அப்புறப்படுத்தி, மாவட்ட செயலாளர் நந்தகுமாரையும், முன்னாள் எம்.பி. முகமது சகி, முன்னாள் மேயர் கார்த்திகேயன் ஆகியோரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
அணைக்கட்டு தொகுதிக்கு நந்தகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பாபுவிற்கு அணைக்கட்டு பகுதியில் கட்சி ஆதரவாளர்கள் அதிகம். நந்தகுமாருக்கு சீட் ஒதுக்கியதை கண்டித்து உடனே சாலை மறியலில் இறங்கினார்கள். கட்சி அலுவலகத்திற்கு புகுந்து மாவட்ட செயலாளரையே தாக்கும் அளவிற்கு வந்து நிற்கிறார்கள்.
பாபு மீது பல்வேறு வழக்கு உள்ளது. முக்கியமாக 2014-ல் செம்மரக்கடத்தல் வழக்கில் குண்டர் சட்டம் போடப்பட்டு ஆறு மாதம் சிறையில் இருந்தவர் பாபு. அவருக்கு நிச்சயமாக சீட் வழங்க முடியாது என மறுத்துவிட்டார் தளபதி. அதனை பொறுத்துக்கொள்ளாமல் இப்படி அடி தடியில் இறங்கியுள்ளனர் என்று கூறுகின்றனர் வேலூர் மாவட்ட திமுகவினர்.
இப்பவே இப்படி என்றால் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை ஜெயிக்க விடுவார்களா என்பதுதான் உடன்பிறப்புகளின் கேள்வியாகும்.
வேட்புமனு தாக்கல் செய்யப்படும் வரை இதுபோல வேடிக்கைகள் நடந்து கொண்டுதான் இருக்கும். அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்ப.