சட்டசபையில்தான் உங்களால் தடுக்க முடியும், மக்களிடம் பேசுவதைத் தடுக்க முடியாது- கனிமொழி
விழுப்புரம்: சட்டசபையில் நாங்கள் பேசுவதைத்தான் ஆட்சியாளர்கள் தடுக்க முடியும். மக்கள் சபையில் பேசுவதை அவர்களால் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி.
தமிழக சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் தமிழகத்தில் திமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
சென்னையில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். மதுரை, திருச்சியில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழுப்புரத்தில் கனிமொழி பேசினார்.
கனிமொழி பேச்சிலிருந்து....
பேசவே விடுவதில்லை
மக்கள் மன்றத்தில் தமிழக சட்டசபையில் எதிர் கட்சிகள் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. சட்டசபையில் தான் எதிர்கட்சிகள் பேசுவதை உங்களால் தடுக்க முடியும். மக்கள் மன்றத்தில் பேசுவதை உங்களால் தடுக்க முடியாது.
சிதைத்து வரும் அதிமுக அரசு
தமிழக சட்டசபை எத்தனையோ புகழ்மிக்க தீர்மானங்களையும், சட்ட திருத்தங்களையும் கொண்டு வந்தது. ஆனால் அதனையெல்லாம் அ.தி.மு.க. அரசு சிதைத்து வருகின்றது.
92 அறிவிப்புகள்
முதல்வர் ஜெயலலிதா கடந்த 14 நாட்களில் 18 முறை 110 விதியின் கீழ் 92 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகளின் மதிப்பு 20 ஆயிரம் கோடியாகும். இவற்றின் மீது எதிர்கட்சிகள் எந்த விவாதமும் நடத்த அனுமதிக்கப்படவில்லை.
அதெல்லாம் நடப்பதில்லை
ஜனநாயகம் என்றால் பெரும்பான்மை மக்களின் தேவை, எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதாகும். ஆனால் தமிழகத்தில் இதுபோன்று நடப்பதில்லை.
மவுலிவாக்கம் கட்டட விபத்து
சென்னை மவுலிவாக்கம் கட்டட விபத்திலே 61 பேர் இறந்தார்கள். 6 மாடி மட்டுமே கட்டக்கூடிய இடத்தில் 11 மாடிகள் கட்டப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதுகுறித்து கூட எதிர்கட்சியினர் பேச அனுமதிக்கவில்லை. இதில் பல்வேறு முடிச்சுகள் மறைந்துள்ளன.
பெண்களுக்கு எதிரான கொடுமை அதிகரிப்பு
கடந்த 3 ஆண்டுகளிலே அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து கொண்டே வருகின்றன.
10,000 பேருக்கு மட்டுமே இதுவரை வேலை
கடந்த 3 வருடத்தில் தமிழக அரசின் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது என்றார் கனிமொழி.