நீட் எதிர்ப்பு : செப்டம்பர் 8ல் திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம் - ஸ்டாலின்
மத்திய மற்றும் மாநில அரசைக் கண்டித்து செப்டம்பர் 8ஆம் தேதி திருச்சியில் எதிர்க்கட்சிகள் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: மத்திய மற்றும் மாநில அரசைக் கண்டித்து செப்டம்பர் 8ஆம் தேதி திருச்சியில் எதிர்க்கட்சிகள் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட்தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது தற்கொலைக்கு மத்திய-மாநில அரசுகள் பொறுப்பு ஏற்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளன நிலையில், திமுக தலைமையில் சென்னையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட 10 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என அனைத்து தலைவர்களும் தெரிவித்தனர்.
அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்தும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக கூறி பின்னர் மறுத்த மத்திய அரசைக் கண்டித்தும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், அனிதா மறைவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
நீட்டிற்கு எதிராக வரும் 8ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். இதில் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்பர். அதன் பிறகு எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.