ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் ரத்து.. திமுக இன்று கண்டன பொதுக்கூட்டம்.. கூட்டணி கட்சிகள் பங்கேற்பு
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்ட புகார் காரணமாக தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், ஜனநாயகத்துக்கு விரோதமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறி தி.மு.க. இன்று கண்டன பொதுக் கூட்டம் நடத்துகிறது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், முறை கேட்டில் ஈடுபட்ட முதல்வர், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோவில் திடலில் தி.மு.க. சார்பில் கண்டன பொதுக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த பொதுக் கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதில் கூட்டணி கட்சித் தலைவர்களான தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் உள்பட பலர் பங்கேற்று பேசுகிறார்கள்.
இந்த பொதுக் கூட்டத்திற்கு சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், வேட்பாளரான மருது கணேஷ் உள்பட பலர் பங்கேற்று பேசுகின்றனர்.
முன்னதாக இக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இதை எதிர்த்து திமுக சார்பில் ஹைககோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறை திமுக கூட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.