சேலம் மாநகராட்சி கூட்டத்தில் கைகலப்பு: திமுக கவுன்சிலருக்கு அடி உதை
சேலம்: சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், திமுக கவுன்சிலரை, அதிமுக உறுப்பினர்கள் அடித்து உதைத்து வெளியே தள்ளியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சவுண்டப்பன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் குறித்து வாழ்த்து தீர்மானத்தை மேயர் சவுண்டப்பன் வாசித்தார். அதை தொடர்ந்து, திமுக கவுன்சிலர்கள் எழுந்து, கடந்த வாரம் கும்பகோணத்தில் துப்புரவு பணிக்காக சென்ற சேலம் துப்புரவு பணியாளர் இறப்புக்கு இரங்கல் தீர்மானமும், மவுன அஞ்சலியும் வாசிக்க கோரினர். அதனை ஏற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர்கள், தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியும், எழுந்து நின்று கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை பொருட்படுத்தாத அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து ஆரவாரம் செய்தனர். அப்போது, திமுக கவுன்சிலர் தெய்வலிங்கம், தாம் மறைத்து எடுத்து வந்த ஜால்ராவை தட்டி ஒலி எழுப்பி அதிமுக கவுன்சிலர்கள் முதல்வருக்கு ஜால்ரா போடுவதாக குறிப்பிட்டார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அவரை வெளியேற்றுமாறு மேயரிடம் அதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, தெய்வலிங்கத்தை வெளியேறுமாறு மேயர் உத்தரவிட்டார். ஆனால், அவர் வெளியேற மறுத்ததால் அதிமுக கவுன்சிலர்கள் சிலர் அடித்து இழுத்து வெளியே தள்ளினர். அதனால், கூட்ட அரங்கில் சலசலப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications