தமிழக மீனவர்களை இலங்கை தாக்கும் நிலையில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரசாரமா.. சல்மானுக்கு திமுக கண்டனம்
சென்னை: தமிழக மீனவர்களைத் தொடர்ந்து இலங்கைக் கடற்படை தாக்கும் நிலையில், அந்த நாட்டின் அதிபரான ராஜபக்சேவுக்கு ஆதரவாக சல்மான் கான் பிரசாரம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக கூறியுள்ளது.
ஏற்கனவே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சல்மான் கானை நம்பிக்கை துரோகி என்று வர்ணித்துள்ளார். இந்த நிலையில் திமுகவும் சல்மான் கானுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில் இது தமிழர் பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்சினை. தமிழக மீனவர்கள் இந்தியர்கள். அவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்குகிறது, சுடுகிறது, சிறை பிடிக்கிறது.
இந்த நிலையில் சல்மான் கான் இலங்கைக்குப் போய் ராஜபக்சேவை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார். அப்படியானால் அவருக்கு இந்திய மீனவர்கள் குறித்து அக்கறை இல்லை, தமிழக மீனவர்கள் குறித்து அவர் கவலைப்படவில்லை என்றுதான் அர்த்தமாகிறது. இது கடுமையான கண்டனத்துக்குரியது என்றார் இளங்கோவன்.
ராஜபக்சேவுக்கு ஆதரவாக, இலங்கையைச் சேர்ந்தவரும், இந்தி சினிமாவில் நடித்து வருபவருமான ஜாக்குலின் பெர்னாண்டஸோடு ஜோடி போட்டுக் கொண்டு சல்மான் கான் பிரசாரம் செய்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications