நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம்- கூட்டணியில் புதிய கட்சிகள்?
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான தமிழக அரசியல் கூட்டணிகள் அடியோடு மாறி வரும் நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்களின் அவசரக் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் கழற்றிவிடப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக திடீரென திமுக பக்கம் சாயத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கைவிடப்பட்ட கதியில் கிடக்கும் காங்கிரஸும் கூட திமுக அணியில் 5 சீட்டுகளாவது பெற்றுவிடுவது என்று வாழ்வா? சாவா? போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.
அதிமுக அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட இடதுசாரிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக அணிக்கு போகக் கூடும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் திடீரென நாளை காலை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெறும் இந்த அவசர கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தேமுதிக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.