நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக தாழ்த்தப்பட்டோர்
15. அகில இந்திய அளவில் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு
1989ஆம் ஆண்டு, தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
மண்டல் கமிஷன் அறிக்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு செய்திட வேண்டும் என்ற பரிந்துரையை செயல்படுத்திட வேண்டுமென இந்திரா சவ்கானி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டதைப் போல, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

16. பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் கமிஷன் பரிந்துரையை முழுமையாக அமல்படுத்துதல்
தலைவர் கலைஞர் அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் ஆட்சியில் மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆண்டுகள் 17 ஆன பின்பும், இன்று வரை பிற்படுத்தப்பட்டோருக்கான
27 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படாமல், மத்திய அரசின் ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளில் உள்ள இடங்களில் இன்றைய நிலையில்
14 சதவிகிதம் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய ஒன்றாகும்.
எனவே மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி, பிற்படுத்தப் பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில், நிரப்பப்படாத பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை தி.மு.கழகம் வற்புறுத்தும்.
17. தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பு மாணவர்களுக்கு இலவசக் கல்வி
தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்புகளை எவ்விதத் தடைகளுமின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக, கல்லூரிக் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்தையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் வகையில் உதவித் தொகையளிக்க வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டிலும், ஏனைய பல மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பல பிரிவுகள் உள்ளன. இடஒதுக்கீடு கொள்கையின் வழியாக ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் பயன்பெற்று வந்தாலும், இச்சமூகத்தினரில் ஒரு பிரிவினர் கல்வி மற்றும் சமுதாய நிலைகளில் மிகமிக பின்தங்கியோராக உள்ளனர். இந்நிலையை மாற்ற தமிழ்நாட்டில் முதல்வராக கலைஞர் அவர்கள் இருந்தபோது எடுத்த பெரும் முயற்சியால் தாழ்த்தப்பட்ட பிரிவில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் அருந்ததியினருக்கு தனியாக 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற மாநிலங்களிலும் தாழ்த்தப்பட்ட பிரிவினரில் மிகப் பின்தங்கியோரை இனம் கண்டறிந்து, தமிழ்நாட்டில் அருந்ததியினருக்கு வழங்கிய தனி இடஒதுக்கீடு போன்று வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.கழகம் வலியுறுத்தும்.
மத்திய அரசு வேலைகளுக்கான நேர்காணலுக்குச் செல்லும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பு மாணவர்களுக்கு அவர்களுடைய பயணச் செலவை மத்திய அரசே ஏற்க வேண்டுமென தி.மு.கழகம் வலியுறுத்தும்.
18. தாழ்த்தப்பட்டோருக்கு வீட்டு வசதி
1971ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் அமைத்து, நகரங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த எளிய மக்களுக்குப் பல்லாயிரக்கணக்கான அடுக்குமாடி வீடுகள் கட்டித்தரப்பட்டன.
1996இல் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்த போது, முதல் முறையாக, அனைத்து சமூகப் பிரிவினரும் இணைந்து வாழும் வகையில் "பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்" மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டன. பின்னர் 2006ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.கழக ஆட்சியில் இத்திட்டம் ஒன்றிய, வட்டார அளவில் விரிவுபடுத்தப்பட்டது.
மேற்கூறிய திட்டங்களில் விடுபட்டுப்போன ஊர்ப்புறங்களில் குடிசைகளிலே வாழ்ந்து வருகின்ற தாழ்த்தப்பட்ட சமுதாயப் பிரிவினர் அனைவருக்கும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்குள் தரமான வீடுகள் கட்டித் தருவதற்கு மத்திய அரசு, மாநில அரசின் நிதிப் பங்கேற்புடன் செயல் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டுமென்று உறுதியாக தி.மு.க. வலியுறுத்தும். இந்த வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு தற்போது 1 இலட்சம் என்று உள்ளதை ரூ. 3 இலட்சம் வரை உயர்த்தித் தந்திடுவதற்கான முயற்சிகளை தி.மு.கழகம் மேற்கொள்ளும்.
19. நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்
சாதி சமயப் பிணக்குகளை அகற்றி, அனைத்துச் சமுதாய மக்களும் நல்லிணக்கமாக ஒன்று கூடி சமத்துவ உணர்வுடன் வாழ்கின்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில், இந்தியச் சுதந்திரப் பொன் விழாவையொட்டி, 1997ஆம் ஆண்டில் தி.மு. கழக அரசு உருவாக்கிய புதுமையான, புரட்சிகரமான திட்டமாம், "பெரியார் நினைவு சமத்துவபுரம்" திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 145 சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிடும் நோக்கில், சமத்துவ புரங்களை நாடெங்கிலும் ஏற்படுத்திட வலியுறுத்துவோம்.
20. உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக தாழ்த்தப்பட்டோர் நியமனம்
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்டோர்/ பழங்குடியின மக்கள் போதுமான அளவில் இடம்பெறவில்லையெனில் அவர்களுக்கு உரிய பங்கு கிடைக்கும் விதத்தில் தரவரிசையினைத் தவிர்த்து அவர்களுக்கு முன்னுரிமை அளித்து சமூக நீதி காத்திட தி.மு.கழகம் வலியுறுத்தும்.
21. நெசவாளர் நலன் (Viewers Welfare)
நெசவாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளான
விசைத்தறி தொழிலுக்கு வசூலிக்கப்படும் கலால் வரி அகற்றுதல்.
- சிட்டா நூல் மீதான வரி மற்றும் சர் சார்ஜ் குறைத்தல்.
- பருத்திநூல் ஏற்றுமதி அளவினைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அதன்மீது விதிக்கப்படும் கலால் வரியைக் குறைத்தல்.-
- பருத்தி மற்றும் கழிவுப்பஞ்சு இறக்குமதிமீது விதிக்கப்படும் சுங்கத் தீர்வையை நீக்குதல்.
- காஞ்சிபுரத்தில் பாரம்பரிய கைத்தறிப் பட்டு நெசவுத் தொழில் மையம் உருவாக்குதல்.
- பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாத்திடவும்; அந்த நெசவாளர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
ஆகிய பிரச்சினைகள் குறித்து, சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துபேசி சுமுகத்தீர்வு கண்டு நெசவாளர்கட்கு உரிய பாதுகாப்பு அளிக்க தி.மு.கழகம் பாடுபடும்.












Click it and Unblock the Notifications