மேஜை மீது ஏறி வாக்குவாதம் செய்த திமுக பூங்கோதை... உச்சக்கட்ட களேபரம்
சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் இன்று கடுமையான ரகளைகள் அரங்கேறின. திமுக எம்எல்ஏவான பூங்கோதை மேசை மீது ஏறி சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சசிகலா தரப்பு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டசபை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது ஓபிஎஸ் அணியினர் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களை எம்எல்ஏக்கள் சந்தித்தப் பின் வாக்கெடுப்பு நடத்தலாம் என கோரிக்கை விடுத்தனர்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும் ஓபிஎஸ் அணியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதனை சபாநாயகர் தனபால் திட்டவட்டமாக மறுத்தார்.
மேலும் எப்படி வாக்கெடுப்பு நடத்துவது எனது உரிமை. அதில் தலையிடாதீர்கள் என்றும் கூறினார். இதையடுத்து திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது திமுகவின் எம்எல்ஏவான பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று சபாநாயகரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.