சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்களின் கூச்சல்கள்... பகிரங்க மன்னிப்பு கேட்ட ஸ்டாலின்
சென்னை: சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை எரிச்சலடையச் செய்திருப்பதால் சபையில் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., 89 இடங்களில் வெற்றி பெற்று, வலுவான எதிர்க் கட்சியாக அமர்ந்துள்ளது. இதனால், சட்டசபை விவாதங்களில், சூடு பறக்கிறது.
கடந்த ஜூலை 27ம் தேதி திமுகவின் சட்டமன்ற கொறடா பேசிக்கொண்டிருக்கும்போது பின் வரிசையில் இருந்த திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். எங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க என்று ஒரு கையை உயர்த்தி ஒரு விரலைக் காட்டி கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மரியாதை கொடுக்காத எம்.எல்.ஏக்கள்
ஸ்டாலின் அவரை அமரச்சொல்லி சைகை செய்தும் அவர் அடங்கவில்லை. சபாநாயகர் தனபால், "உங்கள் கொறடாவை உட்காரவைத்துவிட்டு உங்களை பேச அனுமதிக்கட்டுமா? கேட்ட பிறகே ஜெ.அன்பழகன் உட்கார்ந்தார். எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின் பேச்சை கேட்காமல் இருப்பதான தோற்றத்தை உருவாக்குகிறார்கள் திமுக எம்.எல்.ஏக்கள்.
திமுக - அதிமுக சரியான போட்டி
ஆளுங்கட்சி தரப்பில், கடந்த தி.மு.க.ஆட்சி காலத்தில் ஏற்பட்ட நிர்வாக குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதில் மும்முரமாக இருந்து செயல்படுகின்றனர். அதேபோல, கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சி மற்றும் தற்போதைய ஆட்சியின் செயல்பாட்டில் உள்ள குறைகளை முக்கியமாக வைத்து, தி.மு.க,வினர் பேசுகின்றனர்.
மகேஷ் பொய்யாமொழி
சட்டசபையில், தி.மு.க., உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி பேசிய போது, கைத்தறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குறுக்கிட்டு, ஒரு கருத்தை கூறினார்; அதற்கு, தி.மு.க., உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அமைச்சர் கருத்தை, ஸ்டாலின் மறுத்தார். அதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சபை நிகழ்ச்சிகள் பாதிக்கப்பட்டன.
கூச்சல் குழப்பம்
ஒவ்வொரு நாளும், இப்படியே நேரத்தை வீணடிக்கிறீர்கள். நீங்கள் கூறியதும் சபைக்குறிப்பில் இருக்கும்; அமைச்சர் கூறியதும் இருக்கும் என்று சபாநாயகர் கூறினார். இதற்கு, தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து கூச்சல் போட்டனர். அப்போது, ஸ்டாலின் எழுந்து, முதல்வர், அமைச்சர் பற்றி சில வார்த்தைகளை கூறினார் அதை, சபாநாயகர் நீக்கினார்.
ஓபிஎஸ் விளக்கம்
நான் கூறியதை நீக்கினால்,அமைச்சர் கூறியதையும் நீக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். அதற்கு அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், உங்கள் ஆட்சியில் எஸ்.வி. சேகரும், கலைராஜனும் மோதிக் கொண்ட போது, நான் கேட்டுக் கொண்ட பிறகும் நீங்கள், 'இருவரது வார்த்தைகளும் குறிப்பில் இருக்கட்டும்' என்றீர்கள் என்றார்.
கேலி செய்த எம்.எல்.ஏக்கள்
அந்தந்த நேரத்தில் எடுக்கப்படும் முடிவு என்றார் ஸ்டாலின். உடனே சபாநாயகர், என் தீர்ப்பை மாற்றவே முடி யாது.தொடர்ந்து,சபாநாயகர் பேச முயன்ற போது, தி.மு.க., உறுப்பினர்கள் சிலர், அவரை கேலி செய்யும் வகையில் சத்தம் போட்டனர்.
திட்டமிட்டு பிரச்சினை
அதைக் கேட்ட சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவரும், துணைத் தலைவரும் இதுபோன்ற செயல்களை நியாயப்படுத்துகிறீர்களா; நாடே உங்களை பார்த்து கொண்டிருக்கிறது. நீங்கள் சபையை புறக்கணிக்க திட்டமிட்டு, தினமும் பிரச்னை செய்கிறீர்கள், என்றார்.
ஸ்டாலின் மன்னிப்பு
அதற்கு ஸ்டாலின், தி.மு.க., உறுப்பினர்களின் செய்கைக்காக வெட்கப்படுகிறேன்,வேதனைப் படுகிறேன்.மன்னிப்பு கேட்கவும் தயார். ஆனால், அமைச்சர் கூறிய வார்த்தையை நீக்க வேண்டும் என்று கூறினார்.
கார சார விவாதங்கள்
அமைச்சர் மணியன், ''நான் கூறிய வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்றார். அதன்பின், சபை அமைதியானது.