நெடுஞ்சாலைத்துறை ஊழல்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஹைகோர்ட்டில் திமுக வழக்கு
சென்னை: நெடுஞ்சாலை துறை ஊழல் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3120 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் கூட இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, முதல்வருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய ஹைகோர்ட் தலையிட்டு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையிடம் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஓபிஎஸ்ஸிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை, பன்னீர்செல்வத்திற்கு எதிராக புகாரை பதிவு செய்துள்ளது.
இப்போது முதல்வர் தொடர்பாகவும், திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் மூலம், முதல்வர், துணை முதல்வருக்கு எதிராக சட்டப் போராட்டத்தை திமுக தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.