கூட்டணி விஷயத்தில் ஜெ. பாணி சர்வாதிகாரமே நமக்கும் தேவை: மு.க. ஸ்டாலின்

சென்னையில் அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக் குழுவில் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் இப்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் நாம் தனியாகக் கூட நிற்கலாம். ஏற்காடு இடைத்தேர்தலில் தனியாக நின்றோம். கட்சியினர் உற்சாகமாகப் பணியாற்றினார்கள். ஏற்காடு தேர்தலில் சோர்ந்து போயிடுவோம் என்று ஜெயலலிதா கணக்குப் போட்டார். ஆனா, நம்முடைய டஃப் ஃபைட்டை பார்த்து அவர் மிரண்டு விட்டார். எதிர்க்கட்சி மீது ஆளும் கட்சி புகார் கொடுக்க வேண்டிய அளவுக்கு ஜெயலலிதாவுக்கு பயத்தை ஏற்படுத்தியது நமது தேர்தல் பணி.
தி.மு.க-வுக்கு டெபாசிட் கிடைக்கக் கூடாது என்று ஜெயலலிதா சபதம் போட்டார். அவரது கனவு நிறைவேறவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். அ.தி.மு.க-வில் ஜெயலலிதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதுபோல நாமும் சர்வாதிகாரமாக நடந்துகொள்ள வேண்டும். தலைவர் ஜனநாயகவாதியாக இருக்கட்டும். தேர்தல் சமயத்தில் அவர் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும். கூட்டணியைப் பத்தி பேச 10 நாள், சீட் எண்ணிக்கையை பேச 10 நாள், தொகுதியை அடையாளம் காண 10 நாள்னு இழுத்துக் கொண்டே இருப்பதெல்லாம் கூடாது.
ஜெயலலிதா மாதிரி சர்வாதிகாரமாக கையாள வேண்டும். கொடுக்கிறதை ஏற்றுக் கொண்டால் கூட்டணி, இல்லை எனில் இல்லை என்பதுதான் ஜெயலலிதா பாணி. அதனால்தான் ஆட்சிக்கு வந்தாலும் ஜெயலலிதா பெரும்பான்மையாக உட்காருகிறார். எதிர்க்கட்சியாக இருந்தாலும் அசுர பலத்துடன் இருக்கிறார்.
ஆனா, நாம் கூட்டணி கட்சிகளுக்கு அனைத்து இடங்களையும் தூக்கிக் கொடுத்திட்டு ஆட்சி அமைத்தாலும் 90 சீட்டுகளோடு மைனாரிட்டியாக இருக்கிறோம். இதெல்லாம் ஒத்துவராது. இனி அதிகப்படியான இடங்களில் தி.மு.க. போட்டியிட வேண்டும். நாம் போட்டி போடுற இடங்களை முடிவு செய்து விட்டு மீதி இருப்பதைத்தான் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications