தமிழர்களை விடுவிக்க காங். கடும் எதிர்ப்பு: திமுக கூட்டணிக்கு வாய்ப்பே கிடையாது!
சென்னை: 7 தமிழர் விடுதலை எனும் தமிழக அரசின் முடிவை ஒட்டுமொத்த தமிழகமே கொண்டாடி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைப்பாட்டினால் கூட்டணி விவகாரத்தில் ஊசலாட்டமான நிலையில் இருந்த திமுக இனி காங்கிரஸ் பக்கமே எட்டிப் பார்க்காது என்றே கூறப்படுகிறது.
ஈழத் தமிழர் பிரச்சனையை முன்வைத்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருந்து திமுக கடந்த ஆண்டு வெளியேறியது. அதேபோல் காங்கிரஸ் கட்சியுடனான உறவையும் திமுக முறித்தது. இந்த முடிவுக்கு காரணம் திமுக பொருளாளர் ஸ்டாலின்தான் என்று கூறப்பட்டது. இதனாலே தமது மத்திய அமைச்சர் பதவியை மு.க. அழகிரி உடனே ராஜினாமா செய்யாமல் ஸ்டாலினை வெறுப்பேற்றும் வகையில் இழுத்தடித்தார்.
பின்னர் காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்தும் பேசி தாம் இணக்கமாக இருப்பதாக அழகிரி காட்டிக் கொண்டார். அதன் பின்னர் டிசம்பர் 15-ந் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்ற தீர்மானம் போடவும் ஸ்டாலின் காரணமாக இருந்தார் என்றே கூறப்படுகிறது. பொதுவாக பொதுக்குழுவில் கூட்டணி குறித்து தலைவர் மற்றும் பொதுச்செயலருக்கு அதிகாரம் கொடுத்துதான் தீர்மானம் போடப்படும். ஆனால் திமுகவின் பொதுக்குழுவில் காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கங்கணம் கட்டிய கோஷ்டி
இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசு தமது பிடியை இறுக்க கனிமொழி, தயாநிதி ஆகியோர் எப்படியும் காங்கிரஸ்- திமுக கூட்டணியை உருவாக்குவது என்று களமிறங்கினர். இதனடிப்படையில்தான் சென்னையில் குலாம்நபி ஆசாத், கருணாநிதி வந்து சந்தித்தார். ஆனாலும் ஸ்டாலின் விட்டுக் கொடுக்கவில்லை. பொதுக்குழு என்ன முடிவு எடுத்ததோ அதன்படிதான் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாகவே இருந்தார்.
திமுக மாநாட்டில் ஸ்டாலின் உறுதி
கடந்த வாரம் திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் பேசும்போது கூட மு.க. ஸ்டாலின், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்தியே பேசியதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கனிமொழி தரப்பு எப்படியாவது திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்பாடு செய்தே தீருவது என்று உறுதியாக இருந்து வந்தது.
7 தமிழர் விடுதலை
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ராஜிவ் வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்வதாக அறிவித்தார். ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளும் இதை வரவேற்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்த்து வருகிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று எதிர்ப்பு தெரிவித்தார். இன்று பிரதமர் மன்மோகன்சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு எதிர்ப்பு- அனாதையாக காங்கிரஸ்
அத்துடன் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் நடவடிக்கை எதிராக மேல்முறையீடும் செய்திருக்கிறது மத்திய அரசு. ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசும் தமிழர்களிடத்தில் தற்போது அன்னியப்பட்டுதான் நிற்கிறது. இதில் துளியளவும் சந்தேகம் இல்லை. இப்படி அன்னியப்பட்டு அனாதையாகிக் கிடக்கிற காங்கிரஸை தோளில் தூக்கிக் கொண்டு தெருத்தெருவாக தொகுதி தொகுதியாக திமுக போகும் என்ற பேச்சுக்கே இடமும் இல்லை என்றேதான் சொல்ல வேண்டும்.
"ஸ்ட்ராங்" ஸ்டாலின்
இதுநாள் வரை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கூடவே கூடாது என்ற மு.க. ஸ்டாலின் நிலை இப்போது மேலும் உறுதியானதாக மாறியிருக்கிறது. காங்கிரஸுடன் கூட்டணி வைக்கலாம் என்று சொல்லுகிற சில திமுகவினர் வாதத்துக்கும் இனி வாய்ப்பு இல்லை. ராகுல் காந்தியே வந்து சந்தித்தாலும் காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைக்காது என்றே நம்பலாம். அப்படி கூட்டணி வைத்தால் காங்கிரஸ் கட்சியின் கதியைத்தான் திமுகவும் சந்திக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.