வேலூர் மாவட்ட ஆட்சியரை மாற்ற கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு
வேலூர்: நீண்ட நாட்களாக பணியாற்றுவதால் வேலூர் மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், தி.மு.க. சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொடுத்த மனுவில், வேலூர் மாவட்ட கலெக்டராக ஆர்.நந்தகோபால் 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் கால கட்டத்தில் இருந்து நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார்.
3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றிய காரணத்துக்காக எம்.பி. தேர்தலின்போது அவர் வேலூரில் இருந்து சில காலம் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். ஆளும் கட்சிக்கு ஆதரவாளராக நடந்துகொள்வதால், எம்.பி. தேர்தல் முடிந்ததும் அவர் மீண்டும் வேலூருக்கு மாற்றப்பட்டார்.
கடந்த 5 ஆண்டுகளாக அவர் வேலூர் ஆட்சியராக இருக்கிறார். தேர்தல் விதிமுறைகளை தந்திரமாக அ.தி.முக. மீறும் செயல்பாட்டுக்கு இது நல்ல உதாரணமாகும். எனவே, வேலூர் மாவட்டத்தில் இருந்து கலெக்டர் நந்தகோபாலை இடமாற்றம் செய்வதோடு அவருக்கு தேர்தல் பணிகள் எதையும் தரக்கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.