ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நாளைக்கே நடந்தாலும் திமுக போட்டியிடும் - ஸ்டாலின்
ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் தி.மு.க. அதை எதிர்கொள்ளும். நாளைக்கே தேர்தல் நடந்தாலும் தி.மு.க. அங்கு போட்டியிடும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க திமுக தயாராக உள்ளது என சட்டசபை எதிர்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவினர் வருகை தந்துள்ளனர். அவர்கள் தமிழகத்தில் நிலவும் உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது வந்த எய்ம்ஸ் மருத்துவ குழு இதுவரை எதுவும் கூறவில்லை. அதே போல இல்லாமல் உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
சேலத்தில் டெங்குவினால் குழந்தை மரணமடைந்துள்ளது. இதற்கான சான்றிதழே அளித்துள்ளனர் என்று கூறினார் ஸ்டாலின்.
ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று விஜயகாந்த் கூறியுள்ளாரே என்று கேட்கப்பட்டதற்கு அது அவருடைய நிலைப்பாடு என்று கூறினார்.
ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடந்தாலும் தி.மு.க. அதை எதிர்கொள்ளும். நாளைக்கே தேர்தல் நடந்தாலும் தி.மு.க. அங்கு போட்டியிடும் என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் என்ன காரணங்களுக்காக ஆர்.கே.நகரில் தேர்தல் நிறுத்தப்பட்டதோ அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இப்போதும் அவர்தான் முதல்வராக இருக்கிறார். என்ன நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications