திமுக சிட்டிங் எம்.பிக்களில் 8 பேருக்கு மட்டும் சீட்- அழகிரி உட்பட 9 பேருக்கு கல்தா!!
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவின் 8 எம்.பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மு.க. அழகிரி உட்பட 9 எம்.பிக்களுக்கு போட்டியிட திமுக வாய்ப்பு அளிக்கவில்லை.
லோக்சபா தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 35 இடங்களில் திமுக போட்டியிடும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். இந்த பட்டியலில் 8 சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 28 இடங்களை வென்றது. இதில் திமுக மட்டும் 18 இடங்களை கைப்பற்றியது. இவர்களில் வேலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்தவர்.
எஞ்சிய 17 திமுக எம்.பிக்களில் 8 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், டி.கே.எஸ். இளங்கோவன், ஜெகத்ரட்சகன், தருமபுரி தாமரைச் செல்வன், நாகை விஜயன், நாமக்கல் காந்தி செல்வன் ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளனர்.
கடந்த முறை அரக்கோணத்தில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகன் இம்முறை ஸ்ரீபெரும்புதூரிலும் ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்ட டி.ஆர். பாலு, இம்முறை தஞ்சாவூரிலும் வடசென்னையில் போட்டியிட்ட டி.கே.எஸ். இளங்கோவன் தென் சென்னையிலும் களம் காணுகின்றனர். மற்றவர்கள் கடந்த முறை போட்டியிட்ட தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகின்றனர்.,
அழகிரி உட்பட 9 பேருக்கு கல்தா
சிட்டிங் எம்.பிக்களான மதுரை மு.க. அழகிரி, கள்ளக்குறிச்சி ஆதிசங்கர், கன்னியாகுமரி ஹெலன் டேவிட்சன், கிருஷ்ணகிரி சுகவனம், பெரம்பலூர் நெப்போலியன், ராமநாதபுரம் ரித்தீஷ், தஞ்சாவூர் பழனிமாணிக்கம், தூத்துக்குடி ஜெயதுரை, திருவண்ணாமலை வேணுகோபால் ஆகிய 9 பேருக்கு மீண்டும் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு அளிக்கவில்லை.