யார் பெரியவர்?.. வெட்டுக் குத்தில் முடிந்த சேலம் திமுக சண்டை!
சேலம் திமுகவில் யார் பெரியவர் என்கிற ஈகோ வெட்டு குத்தில் முடிந்திருக்கிறது.
சேலம்: சேலம் தி.மு.கவில் யார் பெரியவர் என்ற சண்டை தொடங்கிவிட்டது. முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தரப்புக்கும் மாவட்ட செயலாளர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் தரப்புக்கும் இடையில் இன்று நடந்த சண்டை வெட்டுக்குத்தில் முடிந்துவிட்டது.
சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பதவிக்கு செல்வகணபதியை முன்னிறுத்தும் வேலைகள் தொடங்கிவிட்டன. இதற்காக செல்வகணபதியை களம் இறக்குகிறார் வீரபாண்டியார் மகன் ராஜா
இந்நிலையில் சேலம் சாமிநாதபுரத்தில் இன்று காலை தி.மு.க உறுப்பினர் சேர்க்கை படிவம் விநியோகிக்கும் வேலைகள் நடைபெற்றன. இதற்கான பணிகளில் செல்வகணபதி தரப்பினர் ஈடுபட்டு வந்தனர்.
வெட்டு குத்து
இதனை எதிர்த்து ராஜேந்திரன் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இருதரப்பும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் ஆதரவாளர்கள் சுரேஷ், பிரகாஷ் ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். செல்வகணபதி தரப்பிலும் விநோத்குமார், பரதன் ஆகியோர் காயமடைந்தனர்.
வளர்த்துவிட்ட அறிவாலயம்
இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகி ஒருவர், வீரபாண்டியார் உயிரோடு இருக்கும் வரையில் ஸ்டாலினுக்கு அவர் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. கருணாநிதியை மட்டுமே அனைத்து இடத்திலும் பிரதானப்படுத்துவார். இதனை விரும்பாத ஸ்டாலின், வீரபாண்டியாருக்கு எதிராக இருந்த ராஜேந்திரனை வளர்த்துவிட்டார்.
மத்திய மா.செ. நியமனம்
வீரபாண்டி ஆறுமுகம் இறந்த பிறகு, சேலம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. இதில் மத்திய மாவட்டத்துக்கு செயலாளர் பொறுப்பு கொடுப்பார்கள் என எதிர்பார்த்துக் காத்திருந்தார் வீரபாண்டி ராஜா. அவருக்குக் கிழக்கு மாவட்டத்தைக் கொடுத்துவிட்டு, மத்திய மாவட்டத்துக்கு செயலாளராக ஆக்கப்பட்டார் ராஜேந்திரன்.
ராஜேந்திரன் ஆதிக்கம்
வீரபாண்டியார் இல்லாததால், மாவட்டம் முழுக்க தனி அதிகாரத்தைச் செலுத்தி வந்தார் ராஜேந்திரன். அவருடைய நடவடிக்கைகளைப் பற்றி திமுக தலைமைக்கு புகார் மேல் புகார் சென்று கொண்டிருந்தன.
விண்ணப்பங்களில் பஞ்சாயத்து
ராஜேந்திரன் மீதான புகார்களை அனுப்புவதன் பின்னணியில் வீரபாண்டியார் மகன் ராஜா இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. தற்போது உறுப்பினர் சேர்க்கை படிவங்களைக் கேட்கப் போகும் நிர்வாகிகளிடம், நீ கட்சிக்காரனா? இத்தனை நாளா ஆளைக் காணோம்? என ராஜேந்திரன் தரப்பினர் கடுமை காட்டுவதாக தலைமைக்குப் புகார் சென்றது. குறிப்பாக, தனக்கு வேண்டப்பட்ட ஆட்களுக்கு மட்டுமே ராஜேந்திரன் தரப்பு படிவங்களைக் கொடுப்பதாகப் புகார் கூறியுள்ளனர்.
அதிகாரத்துக்கு மோதல்
இதனையடுத்து செல்வகணபதி தரப்பில் இருந்து உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. இதனை எதிர்பார்க்காத ராஜேந்திரன் தரப்பினர் இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரண்டு தரப்பிலும் மோதிக் கொண்டதால் நிலைமை விபரீதமாகிவிட்டது என்கின்றனர்.
செல்வகணபதிக்கு முக்கியத்துவம்
வீரபாண்டியார் மரணத்துக்குப் பிறகு, அப்பாவைப் போலவே அதிகாரம் செலுத்த விரும்பினார் ராஜா. அவரது எதிர்பார்ப்பு எதுவும் நிறைவேறவில்லை. அப்பாவை எதிர்த்துப் பதவிக்கு வந்தவர் என்பதால் ராஜேந்திரனை வீழ்த்துவதில் உறுதியாக இருக்கிறார் ராஜா. சேலம் மத்திய மாவட்டத்துக்கு செல்வகணபதியை மாவட்ட செயலாளர் ஆக்கினால், ராஜேந்திரன் டம்மியாகிவிடுவார் என்பதால் அவரை ஊக்குவிக்கும் வேலைகளைச் செய்து வருகிறார் ராஜா. இந்த அதிகாரப் போட்டியில் அப்பாவித் தொண்டர்கள்தான் காயம் அடைகிறார்கள். இதுதொடர்பாக, விரைவில் அறிவாலயத்தில் பஞ்சாயத்து நடக்க இருக்கிறது என்கின்றனர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் தரப்பினர்.