நீதிமன்றங்களில் பின்னடைவை சந்திக்கும் திமுக.. தொடரும் சொதப்பலால் அதிருப்தி!
திமுகவின் சட்டத்துறை மும்முரமாக செயல்படாத காரணத்தால்தான் சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் எந்த ஒரு உத்தரவையும் இதுவரை நீதிமன்றத்தில் பெற முடியாமல் போனது என கூறப்படுகிறது.
சென்னை: சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் திமுகவின் சட்டத்துறை மும்முரமாக செயல்படாத காரணத்தாலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் எந்த ஒரு உத்தரவையும் பெற முடியாமல் போனதாக அதிருப்தி வெளிப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கைகள் அனைத்துமே வலுவான ஆதாரங்களுடன் இருக்கும். அதேபோல் திமுக தொடர்ந்த வழக்குகள் பலவற்றிலும் சட்ட நுணுக்கங்கள் தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால் அண்மைக் காலமாக திமுகவின் சட்ட ரீதியான போராட்டங்கள் பின்னடைவையே எதிர்கொள்கிறது. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ஹைகோர்ட்டில்...
திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜரானார். இந்த வழக்கானது பொறுப்பு தலைமை நீதிபதி ஜி. ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

நீங்க ஏன் மனு தாக்கல்?
அப்போது நீதிபதிகள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையேயான பிரச்சனையில் திமுக எப்படி மனுத்தாக்கல் செய்கிறது என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மனுதாரர் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர். அவர் போர் நினைவுச் சின்னம் அருகேயே தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கிருந்து சட்டசபைக்கு நடந்தே வந்தார். சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரியதால் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டனர் என்றார்.

திருப்தி அடையாத நீதிபதிகள்
ஆனால் இதில் திருப்தி அடையாத நீதிபதிகள், நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உங்களிடம் வீடியோ ஆதாரங்கள் ஏதும் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சட்டசபை நிகழ்வுகளை ஒரு தனியார் தொலைக்காட்சி மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. சட்டசபை நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்களை தாக்கல் செய்ய சட்டசபை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கோரிக்கை நிராகரிப்பு
இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், மனுதாரர்கள்தான் வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 27-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். திமுக தரப்பு தம்முடைய வாதங்களை ஆணித்தரமாக ஆதாரங்களுடன் வைக்காமல் போனதால்தான் உடனே எந்த ஒரு உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற முடியாமல் போனது எனவும் கூறப்படுகிறது.
திமுகவின் சட்டத்துறையை சரியாக சீரமைக்காவிட்டால் தொடர்ந்து பின்னடைவுகளையே வழக்குகளில் சந்திக்க நேரிடும் என ஆதங்கப்படுகின்றனர் மூத்த வழக்கறிஞர்கள்.












Click it and Unblock the Notifications