ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெ.வை எதிர்த்து பொதுவேட்பாளர்? தி.மு.க. தீவிர ஆலோசனை!!
சென்னை: சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட இருக்கும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரை களமிறக்குவது குறித்து தி.மு.க. தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். அப்படி பதவியேற்கும் அவர் 6 மாதத்துக்குள் ஏதேனும் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதனால் ஜெயலலிதா எந்த தொகுதியை தேர்வு செய்வார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் திடீரென ராஜினாமா செய்ய அவரது விலகலை சட்டசபை சபாநாயகர் தனபாலும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
மகிழ்ச்சியில் அதிமுக
இதனால் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில்தான் போட்டியிடுவார் என்பது உறுதியாகி உள்ளது. இது அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஆச்சரியம் கலந்த இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்
அதே நேரத்தில் தமிழக எதிர்க்கட்சிகள் ஜெயலலிதாவின் இந்த அதிரடி முடிவை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இந்த தகவல் வெளியான உடனே தி.மு.க. மூத்த தலைவர்களை உடனடியாக வரும்படி கருணாநிதி அழைப்பு விடுத்தார். அவர்களிடம் கருணாநிதி நீண்ட நேரம் விவாதித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
கருணாநிதி ஆலோசனை
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. களம் இறங்கினால் ஏற்படும் சாதக-பாதங்களை கருணாநிதி விவாதித்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தலாமா? அல்லது பொதுவேட்பாளரை நிறுத்தலாமா என்றும் கருணாநிதி ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
மெகா கூட்டணி
அண்மைக் காலமாக மற்ற எதிர்க்கட்சிகளை கட்சிகளை அரவணைத்து செல்வதில் தி.மு.க. முனைப்போடு இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சில பெரிய கட்சிகளை ஒருங்கிணைந்து 2016 தேர்தலை எதிர்கொள்ளவும் தி.மு.க காய்களை நகர்த்தி வருகிறது.
பொதுவேட்பாளர்?
தே.மு.தி.க., காங்கிரஸ், ம.தி.மு.க., புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சிகளை தமது அணியில் இடம்பெற வைக்க தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல் பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. தலைமையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் நிறுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தவும் தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீரங்கம் போல நடக்குமோ?
அதே நேரத்தில் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் பதவி இழந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கு தி.மு.க. முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் தே.மு.தி.க, இடதுசாரிகள் இதனை ஏற்கவில்லை. பாரதிய ஜனதாவை தே.மு.தி.க. ஆதரித்தது. மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரை நிறுத்தியது. இதனால் திமுகவும் வேட்பாளரை நிறுத்த நேரிட்டது. அதைப் போல இம்முறை நடந்துவிடக் கூடாது என்பதிலும் தி.மு.க. கவனமாக காய்நகர்த்தும் என கூறப்படுகிறது.