ஜெயலலிதாவையே ஆட்டம் காண வைத்த ஆர்.கே.நகர்.. அதிமுகவுக்கு காத்திருக்கிறது ஆசிட் டெஸ்ட்!
ஜெயலலிதாவையே பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யாத ஆர்.கே.நகர் மக்கள், இப்போது உடைந்து போன அதிமுகவுக்கு எப்படி ஆதரவு அளிக்கப்போகிறார்கள்?
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் அவரது மறைவால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து 2015ம் ஆண்டு மே மாதம் கர்நாடக ஹைகோர்ட்டால் விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா, ஜூன் மாதம் ஆர். கே. நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அப்போது, 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் ஜெயலலிதா. இதனையடுத்து அந்த தொகுதி விஐபி அந்தஸ்தை பெற்றது.
ஜெயலலிதாவுக்கு கடும் போட்டி
ஒரு ஆண்டுக்குப் பின்னர், 2016ம் ஆண்டு மே மாதம், சட்டசபை பொது தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஆர். கே.நகரில் போட்டியிட்டார் ஜெயலலிதா. அவரை எதிர்த்து பெண் வேட்பாளர்கள் பலரையும் எதிர் கட்சியினர் களமிறக்கினர். இந்த தொகுதியில் 45 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எனினும் ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானார்.
சிம்லா முத்துச்சோழன்
இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சிம்லா முத்து சோழன் மற்றும், ஜெயலலிதா நடுவேதான் நேரடி போட்டி இருந்தது. சிம்லா முத்து சோழன் 57 ஆயிரத்து 673 வாக்குகள் பெற்றார்.
முதல் சுற்றிலேயே ஷாக்
முதல் சுற்றில் திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை விட 1806 வாக்குகள்தான் ஜெயலலிதா முன்னிலையில் இருந்தார். இதனால் அதிமகு வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது. ஆனால், 19வது சுற்றில் 97 ஆயிரத்து 218 வாக்குகள் பெற்ற ஜெயலலிதா 39 ஆயிரத்து 545 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இடைத் தேர்தலின்போது அடைந்த வெற்றியின் வாக்கு வித்தியாசத்தோடு ஒப்பிட்டால் இது மிக குறைவாகும்.
இடைத் தேர்தல்
5 மாத காலத்திற்குள் அதாவது செப்டம்பர் 22ம் தேதி அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 75 நாட்கள் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆசிட் டெஸ்ட்
ஜெயலலிதாவையே பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யாத ஆர்.கே.நகர் மக்கள், இப்போது உடைந்து போன அதிமுகவுக்கு எப்படி ஆதரவு அளிக்கப்போகிறார்கள் என்பது சசிகலா, தினகரன் உள்ளிட்டோரின் பெருங்கவலையாகும். இத்தேர்தலில் அதிமகு தோற்றால் அது கட்சிக்கு பெரும் பின்னடைவாகும் என்பதால் அதிமுகவுக்கு இது ஒரு ஆசிட் டெஸ்ட் போன்றதாகும்.