நாயை கொல்ல முயன்ற மாணவர்களை பெற்றோரே பிடித்து கொடுத்தனர்.. ஜாமீன் கிடைத்தது
சென்னை: நாயை வீசி கொல்ல முயன்ற மருத்துவ மாணவர்களை கைது செய்ய 2 தனிப்படைகளை காவல்துறை அமைத்த நிலையில், மாணவர்களின் பெற்றோரே அவர்களை போலீசில் பிடித்து கொடுத்தனர்.
அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குட்டி நாயை, ஒரு வாலிபர் கீழே வீசி மகிழ்ச்சியடைவது போன்ற காட்சி கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதை வீசியவர் யார் என்பது தெரியவந்தது.
நாகர்கோவிலை சேர்ந்த கவுதம் சுதர்சன் மற்றும் நெல்லையை சேர்ந்த ஆஷிஷ் பால் ஆகியோர்தான் இதற்கு காரணம் என்று தெரியவந்தது. சென்னை, குன்றத்தூர், கீழ் கட்டளை பகுதியில் தங்கியிருக்கும் இவர்கள், தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்கள்.
இணையத்தில் வெளியானது
இவர்கள் தங்கியிருந்த மாடிக்கு நாய் ஒன்று வந்தது. அதை அவர் 4 வது மாடியிலிருந்து கவுதம் துாக்கி வீசினார். இதை வீடியோ படம் எடுத்த ஆஷிஷ் பால் இணையத்தில் வெளியிட்டார்.
உயிரோடு மீட்பு
புகார் பதிவான நிலையில், இதை அறிந்த இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில் துாக்கி வீசப்பட்ட இடத்திற்கு சென்ற ஒருவர் நான்கு கால்களிலும் காயத்துடன் உயிருக்கு போராடிய நாயை மீ்ட்டு பாதுகாப்பு வழங்கியுள்ளார். தற்போது .நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடுமையான சட்டப்பிரிவு
நாயை கொல்ல முயன்ற மாணவர்கள் மீது 1960ம் ஆண்டு பிராணிகள் வதை தடுப்பு சட்டம் 11-ஏ பிரிவு மற்றும் இந்திய தண்டனை சட்டம் 428, 429 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக, 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படலாம்.
கல்லூரி நிர்வாகம்
மாணவர்களை பிடிக்க கல்லூரி நிர்வாக உதவியை காவல்துறை நாடியிருந்தது. இதையடுத்து மாணவர்கள் சரணடையாவிட்டால், தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று மருத்துவ கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
காவல், ஜாமீன்
இந்நிலையில், 2 தனிப்படைகளை அமைத்தது சென்னை காவல்துறை. ஒரு தனிப்படை நாகர்கோவிலுக்கும், மற்றொரு தனிப்படை நெல்லைக்கும் விரைந்தது. இந்நிலையில், மாணவர்களை அவர்களின் பெற்றோரே போலீசில் பிடித்து ஒப்படைத்தனர். ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு 14 நாள் காவல் விதித்து நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து மாணவர்கள் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு இருவரையும் ஜாமீனில் விடுவித்தார் நீதிபதி.