புதிய அணை கட்ட முயலும் கேரளாவை எதிர்த்து போராடாதீர்கள்... தமிழிசை கிளப்பும் சர்ச்சை
கோவை: முல்லைப் பெரியாறு விவகாரத்திற்காக தமிழகத்தை போராட்டக் களமாக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மும்மூர்த்திகள் இந்நாட்டை வழிநடத்தவதாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி தெரிவித்துள்ளதை விமர்சனமாக அல்லாமல் பாராட்டாக எடுத்துக் கொள்கிறோம். மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டை பொருளாதார முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்கிறது. அருண் ஷோரிக்கு கிடைக்க வேண்டிய சில கிடைக்காததால் அருண் ஷோரி உள்நோக்கத்துடன் அவ்வாறு பேசியுள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் உள்ள நல்ல அம்சங்களை மறைத்துவிட்டு தவறான பிரச்சாரம் செய்கிறார்கள். அதே போன்று தான் ரியல் எஸ்டேட் மசோதா பற்றியும் தவறான கருத்துகளை பரப்புகிறார்கள். இது தொடர்பாக ராகுல் காந்தி தெரிவிப்பவற்றை யாரும் சீரியஸாக எடுக்க வேண்டாம். ஏனென்றால் அவர் எதையும் ஆய்வு செய்து பேசியதே கிடையாது.
ரியல் எஸ்டேட் மசோதா கொண்டு வரப்பட்ட பிறகே அதன் பலன்கள் தெரிய வரும். கார்பரேட்டுகள், பெரு முதலாளிகளுக்கு உதவ வேண்டும் என்ற கட்டாயமோ, அவசியமோ மோடிக்கு இல்லை.
கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவது குறித்த ஆய்வு பணி சட்டத்திற்கு உட்பட்டு நடந்து வரவில்லை. அதனால் அது நிச்சயம் கைவிடப்படும் என்பதால் இதற்காக தமிழகத்தை போராட்ட களமாக்க வேண்டாம். தமிழகம் மற்றும் தமிழக விவசாயிகளுக்கு எதிராக பாஜக அரசு எதையும் செய்யாது. தமிழக விவசாயிகளின் நலனை மனதில் வைத்தே பாஜக அரசு செயல்படும்.
தமிழக அரசு ஊழலில் சிக்கியிருப்பதாக கூறி ஊழலில் திளைத்த காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது. தமிழக அமைச்சர்களின் ஊழலை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் நினைப்பது ஆறுதல் அளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications