அனிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை - முதல்வரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி மனு
அனிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் டாக்டர் கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார்.
சென்னை : அரியலூர் மாணவி அனிதா மரணம் தற்கொலையா அல்லது அரசியலுக்காக நடத்தப்பட்ட கொலையா என்ற சந்தேகம் இருப்பதால் அது குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று முதல்வரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
அனிதா பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆயிரத்து 176 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் நீட் தேர்வில் வெறும் 87 மதிப்பெண் பெற்றதால் மருத்துவ தகுதி பெறவில்லை. நன்கு தெரிந்தே அவர் இந்தத் தேர்வை எழுதியுள்ளார்.
நம்ப முடியவில்லை
மருத்துவ படிப்பு கிடைக்கவில்லை என்றால் விவசாயம் படிப்பதாக சொல்லியிருந்தார் அனிதா. உச்சநீதிமன்றம் வரை சென்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்வது நம்புவதாக இல்லை. உச்சநீதிமன்றம் வரை சென்ற தைரியமான மாணவி அனிதா.
கொலையா?
கஜேந்திரபாபு என்ற நபர், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன், திமுக செயல்தலைவர் ஸ்டாலினையும் அனிதா சந்தித்துள்ளார். இந்த சந்திப்புகள் எதுவுமே அனிதா மரணம் வரை வெளியில் வரவில்லை. ஏழை அனிதாவை நீட் தேர்வுக்கு எதிரான பிரச்னையில் இழுத்த அவருக்கு கொடுத்த தேவையற்ற அழுத்தங்கள் காரணமாக நடந்த கொலையா இது என்ற சந்தேகம் எழுகிறது.
விசாரிக்க வேண்டும்
அனிதாவை டெல்லிக்கு அழைத்து சென்ற கஜேந்திரபாபு, சிவசங்கரன் உள்ளிட்ட அனைவரிடமும் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வரிடம் மனு அளித்துள்ளேன். தர்மபுரி திவ்யா, இளவரசன் காதல் விவகாரத்தில் இளவரசன் தற்கொலை என்று காவல்துறை சொன்னது ஆனால் கொலை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது போல பல முன் உதாரணங்கள் உள்ளன.
அரசியல் கொலை
அரசியல் காரணங்களுக்காக அனிதாவை பயன்படுத்தியிருப்பார்களோ என மக்களுக்கு சந்தேகம் வருகிறது. சில கொலைகள் தற்கொலையாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இளம் மாணவியின் மரணம் அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சி.
ஸ்டாலினை சந்தித்த அனிதா
எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை சில வாரங்களுக்கு முன்பு அனிதா சந்தித்து பேசியுள்ளார். அது பற்றி அவர் மரணமடையும் வரைக்கும் வெளியே தெரியவில்லை. அனிதா மரணமடைந்த பின்னரே புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கீழ்த்தரமான அரசியலுக்காக அனிதா தற்கொலை செய்ய தூண்டப்பட்டிருக்கலாம்.
விரைவில் டெல்லிக்கு பயணம்
முத்துக்குமாரை இலங்கைப் பிரச்னைக்காகவும், சசிபெருமாளை மதுவிலக்கு பிரச்னைக்காகவும், அனிதாவை நீட்டிற்காகவும் பலி கொடுத்துள்ளார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்று முதல்வரை சந்தித்து நீதி விசாரணை கோரி மனு அளித்துள்ளேன். ஓரிரண்டு நாளில் டெல்லி சென்று உள்துறை அமைச்சரையும் சந்திக்க உள்ளேன், என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.