சேரி பிஹேவியர் விவகாரம்... ரூ100 கோடி கேட்டு கமல், காயத்ரி ரகுராமுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி நோட்டீஸ்
விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்திரி ரகுராம் 'சேரி பிஹேவியர்' என்று கூறிய விவகாரத்தில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ரூ. 100 கோடி கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளார்.
சென்னை: விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரி பிஹேவியர் என்று கூறியதற்கு, நடிகர் கமல் ஹாசன், காயத்ரி ரகுராம் ஆகியோருக்கு ரூ100 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராமின் 'சேரி பிஹேவியர்' பேச்சு உடன் இருப்பவர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவரின் இந்த பேச்சு, சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சி தலைவர்களும் காயத்ரியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறாக பேசியதாக ரூ100 கோடி கேட்டு விஜய் தொலைக்காட்சி, நடிகர் கமல்ஹாசன், காயத்ரி ரகுராம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கோவையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், " எனது நோட்டீஸ் தொடர்பாக 7 நாட்களுக்குள் முறையாக பதிலளிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால், 3 பேர் மீதும் வழக்கு தொடரப்படும். ஜனநாயக நாட்டில் யாரும் யார் மனதையும் காயப்படுத்தக்கூடாது" என்று தெரிவித்தார்.