மருத்துவர்கள் அலட்சியமே அப்துல் கலாம் மரணத்துக்கு காரணமா? பொன்ராஜ் மறுப்பும் விளக்கமும்
சென்னை: மருத்துவர்களின் அலட்சியமே மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் மரணத்துக்கு காரணம் என தாம் கூறவில்லை என்று அவரது உதவியாளர் பொன்ராஜ் மறுப்பும் விளக்கமும் அளித்துள்ளார்.
ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் நேற்று, "டாக்டர்களின் அலட்சியமே அப்துல் கலாம் மரணத்துக்கு காரணம்: உதவியாளர் பொன்ராஜ் வேதனை' என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது.
அதில், சேலத்தில் செய்தியாளர்களிடம் செய்தியாளர்களிடம் பேசிய பொன்ராஜ் கூறியதாக, கடந்த, 1996ம் ஆண்டு முதல், அப்துல்கலாமுடன் இணைந்து பணியாற்றியும், அதன்பின், ஆலோசகராகவும் இருந்து வந்தேன். அவருடைய மரணம் எதிர்பார்க்காத ஒன்று. நான், அப்போது, மதுரை வந்து விட்டேன். நான் கேள்விப்பட்ட வரை, மேகாலயா சென்ற அவர், அம்மாநில ஆளுநர் சண்முகநாதனுடன் இணைந்து சாப்பிட்டு விட்டு, ஐ.ஐ.எம்., நிறுவனத்துக்கு சென்றார். அவருடன் எந்த மருத்துவக்குழுவும் செல்லவில்லை. அதை அவர் விரும்பவும் மாட்டார். அங்கு நடந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அவர், திடீரென நெஞ்சில் கைவைத்தவாறு, வாயை திறந்தபடி கீழே விழுந்துள்ளார்.
அங்கு, யாராவது டாக்டர்கள் இருந்தால், காப்பாற்றியிருக்கலாம். அதன்பின், ஆம்புலன்ஸ் மூலம் அவரை கொண்டு சென்றுள்ளனர். இந்தியாவில் மருத்துவத்தைப் பற்றி தெரியாத டாக்டர்கள் உள்ள மாநிலங்களில், மேகாலயாவும் ஒன்று. இதேபோல், பத்துக்கும் மேற்பட்ட மாநிலம் உள்ளது. டாக்டர்கள் ஏதேதோ சிகிச்சை அளிக்க, அதில் தான், அவருடைய முகம் கறுத்துப்போனது. டாக்டர்கள் அலட்சியமும், அவருடைய மரணத்துக்கு காரணமாக அமைந்து விட்டது என கூறலாம். மற்றபடி, கலாம் மறைவுக்கு வேறு எந்த காரணமும் இல்லை' என இடம்பெற்றிருந்தது.
இச்செய்தி குறித்து அப்துல் கலாம் உதவியாளர் பொன்ராஜ் அளித்துள்ள மறுப்பு மற்றும் விளக்கத்தில், நான் என்ன கூறினேன் என புரியாமல் யாரும் தவறான செய்தியைப் பரப்ப வேண்டாம்.
சேலத்தில் ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் ஒருவர், அப்துல்கலாம் முகம் ஏன் கருப்பாக இருந்தது? இது தொடர்பாக வாட்ஸ் அப்பில் ஏராளமான வதந்திகள் வருகின்றன என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நான், அப்துல்கலாம் உடலை பதப்படுத்துவதை முறையாக செய்யாமல் போயிருக்கலாம். அதுதான் கருப்பு நிறமாக இருந்ததற்கு காரணமாக இருக்கலாம். அன்றைய அவரது பயணத்தின் போது ஆம்புலன்ஸ் இருக்கவில்லை. இது ஒரு குறைபாடு.
தேசிய ஊரக சுகாதாரத் திட்ட அறிக்கைப் படி, 15 மாநில அரசுகள் முறையாக சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருக்கவில்லை. இதுதான் உண்மை எனக் கூறினேன். ஆனால் டாக்டர்கள் அலட்சியமாக இருந்ததாக தலைப்பிட்டுள்ளனர். நான் ஒருபோதும் அப்படி சொல்லவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.