பால்பவுடரில் மறைத்து ரூ2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது
சென்னை: ரூ 2 கோடி மதிப்பிளான போதைப் பொருளைப் பால்பவுடரில் மறைத்து மலேசியா கடத்தி செல்ல முயன்ற இளைஞரை சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று காலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்ல தயாராக இருந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளைப் பாதுகாப்புத் துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பரகத்அலி என்ற 29 வயது இளைஞர் ஒருவரின் உடைமைகளைச் சோதனையிட்ட அதிகாரிகள், அவரது பையில் 10 பால் பவுடர் டின்கள் இருந்ததைக் கண்டறிந்தனர்.
இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள், எதற்காக இத்தனை பால்பௌடர் டப்பாக்கள்? என பரகதலியிடம் விசாரித்தனர். அதற்கு பரகத், ‘இது விலை உயர்ந்த பால் பவுடர். மலேசியாவில் கிடைக்காது என்பதால் அங்குள்ள உறவினர்கள். நண்பர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்வதாக' கூறியுள்ளார்.
அவரது பதிலில் திருப்தி அடையாத அதிகாரிகள், பால் பவுடர் டப்பாக்களைப் பிரித்துச் சோதனையிட்டனர். அப்போது பால்பவுடரின் உள்ளே, போதைப்பொருள் இருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, பரகத்அலியின் விமான பயணத்தை ரத்து செய்த பாதுகாப்பு அதிகாரிகள் சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் ரூ 2 கோடி மதிப்பிளான, 20 கிலோ போதைப்பொருளை கைப்பற்றியதோடு, பரகத் அலியையும் கைது செய்தனர்.