குடிகாரர்கள் அட்டகாசம்.. பெண்கள் மீது மோதுகிறார்கள், வேட்டி இல்லாமல் நடக்கிறார்கள்!
மதுரை: மதுரை, அவனியாபுரம் பகுதியில் குடிகாரர்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று பெண்கள் குமுறுகிறார்கள். அதிலும் செம்மண்ணூரணி பகுதியில் ஒரே தெருவில் இரண்டு கடைகளையும், பார்களையும் வைத்துள்ளதால் குடிகாரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை என்று அங்கு வசிப்போர் வேதனை தெரிவிக்கின்றனர்.
குடித்து விட்டு போதையில் நடப்பது, தெருவில் செல்லும் பெண்கள் மீது மோதுவது, வேட்டி கழன்றது கூட தெரியாமல் போவது, ஆங்காங்கே விழுந்து கிடப்பது என்று குடிகாரர்கள் தொல்லை தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக மக்கள் குமுறுகிறார்கள்.

அவனியாபுரம் பிரசன்னா காலனி பூந்தோட்ட நகர், பாரதியார் தெரு, இமானுவேல் நகர், வள்ளானந்தபுரம் ஆகிய பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் செம்மண்ணூரணி வழியாக வந்துதான் அவனியாபுரம் பஸ் நிலையத்திற்கு வரவேண்டும்.
காலை, மாலை நேரங்களில் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளும் மதுரைக்கு சென்று வருகின்றனர். இந்த தெருவில் 2 டாஸ்மாக் பார்களை இணைத்து பிரமாண்ட பார்களாக்கியுள்ளனர். இதனால் குடிகாரர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
குடித்து விட்டு போதையில் ரோட்டில் தள்ளாடி வரும்போது நடந்து செல்லும் பெண்கள் மீது மோதி விடுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்பவர்களும் பொதுமக்களை இடித்து விட்டு செல்கின்றனர். வேட்டி இல்லாமல் நிர்வாண நிலையில் போதையில் விழுந்து கிடக்கிறார்கள் பலர். அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் பிணங்கள் ஆங்காங்கு கிடப்பது போல பலர் மயங்கி போய் ஆங்காங்கு விழுந்து கிடக்கின்றனர்.
இதனால் அந்தத் தெருவே அலங்கோலமாக படு பரிதாபமாக உள்ளது. பெண்கள் நடந்து போகக் கூட அஞ்சும் நிலை உள்ளது. மீறி வெளியே போகும் பெண்களை குடிகார்ரகள் கிண்டல் செய்வதும் நடக்கிறது. உடனடியாக இந்தக் கடை மற்றும் பார்களை அங்கிருந்து தூக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications