கருணாநிதியுடன் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை திடீர் சந்திப்பு- சிபிஐ விசாரிக்க கோரி மனு
சென்னை: தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி திமுக தலைவர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மகள் தற்கொலையில் நீடிக்கும் மர்மத்தை வெளியே கொண்டுவர வேண்டும்; இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தி கருணாநிதியிடம் மனு கொடுக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கை திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி டிஎஸ்பி விஷ்ணுபிரியா திருச்செங்கோட்டில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சம்பவம். இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு ஆகிய இரு வழக்குகளையும் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
சிபிசிஐடி போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். ஆனால் 5 மாதங்கள் ஆகியும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் சிபிசிஐடி விசாரணையில் விஷ்ணுபிரியாவின் தந்தைக்கு எந்தவித திருப்தியும் இல்லை.
இந்த நிலையில் மகள் தற்கொலையில் நிலவும் மர்மத்தை வெளிக்கொண்டு வரவும், தனது மகள் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரியும் டிஎஸ்பி விஷ்ணுபிரியாயின் தந்தை ரவி இன்று திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
இச்சந்திப்பின் போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார்.