குமரியில் கடுமையான கடல் காற்று... விவேகானந்தர் மண்டபம் செல்லத் தடை!
கன்னியாகுமரி கடல் பகுதியில் கடுமையான கடல்காற்று வீசுவதால் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி : கன்னியாகுமரி கடல் பகுதியில் கடுமையான கடல் காற்று வீசுவதால் படகு போக்குரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்லவும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த கன்னியாகுமரியில் கடலில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட இடங்களை பார்வையாளர்கள் காண வசதியாக படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தினமும் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து வழக்கமாக தொடங்கும்.
இந்நிலையில் இன்று காலை முதல் கடல் காற்று அதிக அளவில் வீசுவதால் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. மேலும் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லவும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இந்த இடங்களில் வார இறுதி நாள் என்பதால் பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. எனினும் கடலில் படகு செல்ல தக்க சூழ்நிலை இல்லை என்பதால் தற்காலிகமாக படகுப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் அலை இயல்பு நிலைக்கு வந்த பிறகே மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.