சொன்னபடி நடந்துச்சா!.. நியூஸ் வரலையே.. நவநீதகிருஷ்ணன் பேச்சு குறித்து துரைமுருகன் நக்கல்
நவநீதகிருஷ்ணன் எம்பி தற்கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு துரைமுருகன் நக்கலாகவே பதில் அளித்தார்.
Recommended Video
சென்னை: காவிரிக்காக நாடாளுமன்றத்தில் தற்கொலை செய்வோம் என்று அதிமுக எம்பி நவநீதிகிருஷ்ணன் கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு துரைமுருகன் நக்கலாக பதில் அளித்தார்.
காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஒரு திட்டத்தை 6 வாரங்களுக்குள் உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. எனினும் இதுவரை அமைக்கப்படவில்லை.
அந்த திட்டம் என்பது காவிரி மேலாண்மை வாரியம்தான் என்று தமிழக அரசும், அது வாரியம் அல்ல என்று கர்நாடக அரசும் கூறுகிறது. இந்நிலையில் இன்றுடன் உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடியும் நிலையில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
துரைமுருகன் பேட்டி
தமிழகத்தில் விவசாயிகளின் போராட்டங்களும் வெடித்தன. ஆனால் மத்திய அரசுக்கு மாலை 5 மணி வரை நேரம் கொடுப்போம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
நாடே சிரிக்கிறது
அப்போது அவர் கூறுகையில் பிரதமர் அலுவலகம் முன் அதிமுக எம்.பிக்கள் போராட்டத்தை ஏன் நடத்தவில்லை. இன்று கெடு முடியும் நிலையில் தமிழக அமைச்சரவையை முதல்வர் கூட்டுவதை பார்த்து இந்த நாடே சிரிக்கிறது.
கேட்கமாட்டாரா என்ன
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் போதுமா. அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. சரி ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் சென்று மட்டும் 4 நாட்கள் டெல்லியில் முகாமிட்டால் பிரதமர் என்னானு கேட்கமாட்டாரா என்ன.
பிரதமரை முற்றுகை
காவிரி மேலாண்மை வாரியத்தை உங்களால் அமைக்க முடியாவிட்டால் சொல்லிவிடுங்கள் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்கு எந்த பதிலும் இல்லை. 50 அதிமுக எம்பிக்களும் பிரதமரை முற்றுகையிட்டிருக்கலாமே. மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தை மொட்டையடித்து விட்டனர் . ஸ்கீம் என்பது பற்றி கேட்க கடைசிநாளில் உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு அணுகுவது ஏன் என்றார் அவர்.
சொன்னபடி நடந்ததா
நவநீதகிருஷ்ணன் தற்கொலை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அந்த மாதிரி எதாவது நியூஸ் வந்ததா. அவர் நேற்று பேசியிருக்கலாம். ஆனால் அந்த மாதிரி நடந்ததா இதுவரை செய்தி வரலையே. இதெல்லாம் சும்மா விளையாட்டு நடத்துறாங்க. தற்கொலை செய்வதென்றால் அன்றே செய்ய வேண்டியதுதானே.
தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது
எங்கள் கணக்குபடி இன்னும் 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் தேசிய கட்சிகள் யாரும் ஆட்சிக்கு வரமுடியாது. கர்நாடகத்தில் மட்டுமே காங்கிரஸும், பாஜகவும் ஆட்சி செய்வர். ஆனால் தமிழகத்திலும் ஆந்திரத்திலும் முடியாது. 14.75 டிஎம்சி தண்ணீர் நமக்கு குறைவாக கிடைத்ததற்கு காரணம் வழக்கறிஞர்கள்தான் என்றார் துரைமுருகன்.