ஐந்தே கேள்விகள்தான் கேட்டேன்.. இதுவரைக்கும் பதில் வரவில்லை.. துரைமுருகன்
ராமேஸ்வரம்: சட்டசபையில் நாங்கள் பேச எழுந்தாலே அமைச்சர்கள் பேச விடுவதில்லை. சபாநாயகரும் பேச விடுவதில்லை. அதனால் நான் சட்டசபையில் பேசுவதே இல்லை. பட்ஜெட் கூட்ட தொடரில் 5 கேள்விகள் கேட்டேன். இதுவரை பதில் இல்லை. ஏனெனில் பதில் சொல்ல வேண்டிய அமைச்சர்கள் படித்துவிட்டு சபைக்கு வருவதில்லை.
எந்த பிரச்னை குறித்து பேச எழுந்தாலும் பதிலுக்கு கலைஞரை பற்றி தரக்குறைவாக பேசுகிறார்கள். இதை எப்படி ஏற்க முடியும் என்று கேட்டுள்ளார் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன்.
சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் தி.மு.க.வினர் மாவட்டந்தோறும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில் சட்டமன்ற தி.மு.க துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
துரைமுருகன் பேச்சிலிருந்து...
மீனவர்கள் துயரம்
கடந்த ஒரு மாத காலமாக கடலுக்கு செல்லாமல் மீனவர் சமுதாயம் பட்டினியால் வாடி கொண்டிருக்கிறது. அதை ஏறெடுத்து பார்க்க மத்திய, மாநில அரசாங்களுக்கு மனம் இல்லை. மீனவர்கள் தங்கள் உழைப்பின் மூலம் நிலம் வாங்கி, சொத்து சேர்ப்பவர்கள் அல்ல. வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள் அல்ல. அப்படிபட்ட மீனவர்களின் உள்ளம் கொதிக்கிறதே தவிர, அவர்கள் இல்லங்களில் உலை கொதிக்கவில்லை.
ஓடி வந்திருக்க வேண்டாமா...
போராட்டம் நடத்தும் இவர்களை மத்திய, மாநில அமைச்சர்கள் ஓடிவந்து பார்த்திருக்க வேண்டாமா? தங்களிடம் பிடிபட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என இலங்கை அமைச்சர் சொல்கிறார். அவரது பேச்சுக்கு எதிராக கணடனம் எழவில்லை. தமிழகத்தில் பொறி பறக்கவில்லை. நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கவில்லை. நாட்டை ஆள வந்த பெரும் தலைவராக சொல்லப்படும் மோடி கூட இதனை மறுத்து பேசவில்லை.
சுண்டைக்காய் இலங்கை
மீனவர்களுக்கு எதிராக செயல்படும் சுண்டக்காய் இலங்கையை ஏன் தட்டி கேட்க முடியவில்லை. இது குறித்து பேச சட்டமன்றத்தில் பேச அனுமதி கேட்டால் அனுமதிப்பதில்லை. அங்கே பாராட்டி பேசுபவர்க்ளுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்படுகிறது.
தம்பித்துரைக்காக கடிதமா எழுதினார்
எதை எடுத்தாலும் கடிதம் எழுதும் ஜெயலலிதா, தம்பிதுரைக்கு பதவி கேட்க கடிதமா எழுதினார். தமிழ்நாட்டு மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணாவிடில் துணை சபாநாயகர் பதவியை ஏற்க முடியாது என மிரட்டியிருக்க வேண்டாமா?
தலைமாடு காஷ்மீர்... கால்மாடு ராமேஸ்வரம்
இந்தியாவின் தலையாக உள்ள காஷ்மீரில் உரிமைக்காக போராடுகிறார்கள். கால்மாட்டில் உள்ள ராமேஸ்வரம் தீவான இங்கு உயிருக்காக போராடுகிறார்கள்.
குஜராத்திகளை மீட்ட மொரார்ஜி தேசாய்
உகாண்டா அதிபர் இடி அமீன் 48 மணிநேரத்தில் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என கட்டளையிட்டார். அப்போதைய பிரதமர் மொராஜி தேசாய் 40 மணி நேரத்தில் அங்கிருந்து இந்தியர்களை மீட்டு வந்தார். அதற்கு காரணம் அவர்கள் அனைவரும் குஜராத்திகள்.
தமிழனைக் காப்பாற்ற ஆள் இல்லை
பக்கத்தில் உள்ள இலங்கையில் இப்போதும் தமிழர்கள் எந்த உரிமையும் இன்றி தவிக்கிறார்கள். அவனை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. அதற்கு காரணம் வடக்கே உள்ள உணர்வு நம்மிடம் இல்லாததுதான்.
முதல்வருக்கு தனி சட்டம்
தமிழ்நாட்டில் முதல்வருக்கு ஒரு சட்டம், குடிமக்களுக்கு ஒரு சட்டம் என உள்ளது. முதல்வர் கூட்டம் என்றால் 3 வாரத்துக்கு முன்பே கட் அவுட் வைக்கலாம். துரைமுருகன் கூட்டத்துக்கு பேனர் கூட வைக்க அனுமதி இல்லை என்கிறார்கள். அப்படி என்றால் நாங்கள் எல்லாம் 2ஆம் தர குடிமக்களா?
எனக்கே பேனர் கிடையாதா...
நான் ஒரு எம்.எல்.ஏ. எனக்கே இங்கே பேச, பேனர் வைக்க அனுமதிக்க மறுக்கிறார்கள். சரி சட்டசபையிலாவது பேசலாம் என்றால் அங்கும் பேச விட மாட்டேன் என்கிறார்கள். 40 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். இதில் எத்தனையோ சபாநாயகர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போதைய சபாநாயகரை போல் நான் பார்த்ததில்லை.
பேசுவதே இல்லை
நாங்க பேச எழுந்தாலே அமைச்சர்கள் பேச விடுவதில்லை. சபாநாயகரும் பேச விடுவதில்லை. அதனால் நான் சட்டசபையில் பேசுவதே இல்லை. பட்ஜெட் கூட்ட தொடரில் 5 கேள்விகள் கேட்டேன். இதுவரை பதில் இல்லை. ஏனெனில் பதில் சொல்ல வேண்டிய அமைச்சர்கள் படித்துவிட்டு சபைக்கு வருவதில்லை.
காலரா வந்து செத்தவர்களை...
காலரா வந்து செத்தவர்களை பிரியாணி சப்பிட்டதால் செத்தார்கள் என பதில் கொடுக்கிறார்கள். வறட்சி குறித்து விவாதிக்க நோட்டீஸ் கொடுத்தேன். அதற்கு பதில் கொடுத்தவர்கள் ‘இங்க மட்டுமா வறட்சி 93,437 கன அடி நீர் தேக்கும் மேட்டூரிலும், 10,555 கன அடி நீர் தேக்கும் முல்லை பெரியாரிலும் தண்ணீர் இல்லாததால் வறண்டு கிடக்கிறது' என்கிறார்கள்.
கன அடிக்கும், மில்லியன் கன அடிக்கும் வித்தியாசம் தெரியலையே
கன அடிக்கும், மில்லியன் கன அடிக்கும் வித்தியாசம் தெரியாமல் தவறான தகவல்களை சபையில் தெரிவிக்கிறார்கள்.
எந்த பிரச்னை குறித்து பேச எழுந்தாலும் பதிலுக்கு கலைஞரை பற்றி தரக்குறைவாக பேசுகிறார்கள். இதை எப்படி கேட்டுக்கொண்டு இருப்பது. அதனால்தான் சபாநாயகரை நோக்கி செல்கிறோம். உடனே வெளியே தூக்கி போட்டு விடுகிறார்கள். பின்னர் எப்படி சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னை பற்றி பேசமுடியும் என்று கேட்டார் துரைமுருகன்.