"அமைச்சர்களுக்கு ஆளுநர் உள்ளூர் தெய்வம்".. விளாசி வெளுக்கும் துரைமுருகன்!
மத்திய அரசை வணங்கும் அமைச்சர்களுக்கு ஆளுநர் உள்ளூர் தெய்வமாக விளங்குகிறார் என்று துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
வேலூர்: மத்திய அரசை வணங்கும் அமைச்சர்களுக்கு ஆளுநர் உள்ளூர் தெய்வம் என்று தமிழக எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முகாமிட்டுள்ளார். நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வரிலால் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலையில் கோவை பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டப் பணியை அவர் ஆய்வு செய்தார். பணிகளை ஆய்வு செய்தால் மட்டுமே அரசின் செயல்பாடுகளை பாராட்ட முடியும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு பாராட்டு
இதனை ஏற்கும் விதமாக ஆளுநரின் ஆய்வு திருப்தி அளிப்பதாகவும், அவர் ஆய்வு செய்து அரசின் பணிகளைப் பாராட்டியுள்ளதாக அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார். ஆளுநரின் ஆய்வை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
மாநில சுயாட்சியில் தலையிடும் செயல் இது என்று தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுக்கின்றன. இதே போன்று இது சட்ட விதி மாண்புகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அமைச்சர்களுக்கு கவலையில்லை
இந்நிலையில் ஆளுநரின் ஆய்வு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் மத்திய அரசை வணங்கும் அமைச்சர்களுக்கு ஆளுநர் உள்ளூர் தெய்வமாக விளங்குகிறார் என்று கூறியுள்ளார்.
முதல்வர் நாற்காலியில் ஆளுநரே அமர்ந்தாலும் அமைச்சர்களுக்கு கவலையில்லை.
சுயாட்சிக்கு எதிரானது
நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவது மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு எதிரானது. செயல்படாத ஆட்சியை செயல்பட வைப்பதும், ஆட்சியை கலைப்பதுமே ஆளுநரின் பணி. ஆனால் அவர் இன்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி இருப்பது மரபை மீறிய செயல் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.