தை அமாவாசை: திருநாங்கூர் பெருமாள் கோயிலில் கருட சேவை - துர்கா ஸ்டாலின் தரிசனம்
பகுத்தறிவு நம்பிக்கை கொண்ட குடும்பத்தில் இருந்தாலும் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா.
சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு திருநாங்கூர் பெருமாள் கோவிலில் நடைபெற்ற கருட சேவையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மனைவி பங்கேற்றார்.
நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூர் மணிமாட நாராயண பெருமாள் கோயிலில் கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் 11 திவ்ய தேசங்கள் அமைந்துள்ள ஒரே பகுதி திருநாங்கூர். இங்கு ஒவ்வோர் ஆண்டும் தை அமாவாசையை அடுத்து கருட சேவை நடைபெறுவது வழக்கம்.
கருடசேவையில் பங்கேற்பு
அதேபோல் இவ்வருடத்துக்கான கருட சேவை வியாழக்கிழமை அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்தக் கருட சேவையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
பயபக்தியுடன் தரிசனம்
அவருக்கு கோயில் அர்ச்சகர் கருட சேவையின் நினைவாக பெருமாளின் உருவ படத்தை வழங்கினார். அதைப் பயபக்தியுடன் பெற்றுக்கொண்டார் துர்கா ஸ்டாலின்.
இஷ்ட தெய்வம்
பகுத்தறிவு குடும்பமாக இருந்தாலும் சாமி வழிபாடு செய்வதை, எங்கள் குடும்பத்தில், எவரும் தடுப்பதில்லை என்று கூறியுள்ளார். மாரியம்மன் சாமியை எனக்கு பிடிக்கும் என்று ஏற்கனவே கூறியிருக்கிறார் துர்கா ஸ்டாலின்.
கோவில்களில் தரிசனம்
நாமக்கல் நகரில் உள்ள நரசிம்மர், நாமகிரி தாயார், ஆஞ்சநேயர் சுவாமிகளை, ஒவ்வொரு முறை நாமக்கல் வரும்போதும் வழிபாடு செய்து விட்டுச் செல்வேன் என்றும் கூறியிருந்தார் துர்கா ஸ்டாலின். வீட்டில் ஆண்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் பெண்களின் கடவுள் நம்பிக்கையை தடுப்பதில்லை என்பது ஸ்டாலின் மனைவி துர்காவின் கருத்தாக உள்ளது.