வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
சென்னை: சென்னைக்கு வரும் சகாப்தி ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
சென்னை ரயில்வே போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் இந்தியா முழுவதும் ஓடும் 50-க்கும் மேற்பட்ட சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் குண்டுவெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து ரயில்வே போலீசார் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக அனைத்து மண்டல ரயில்வே தலைமை அலுவலகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 6 மணிக்கு கோவை புறப்பட்ட சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், 7.20 மணிக்கு சென்டிரலில் இருந்து பெங்களூரு புறப்பட்ட சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மேலும் சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் மோப்ப நாய்கள் மூலமும் சோதனை நடத்தப்பட்டது. மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.