தினகரன் நியமனம் செல்லாது...' ஜெயா' வை மீட்போம்- எடப்பாடி தலைமையில் தீர்மானம்
தினகரன் நியமனம் செல்லாது...' ஜெயா' வை மீட்போம்- எடப்பாடி தலைமையில் தீர்மானம்
சென்னை: அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் செயல்பட முடியாது என்றும், நமது எம்ஜிஆர், ஜெயாடிவியை கைப்பற்றுவோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தினகரனை தாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மொத்தம் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலாவை நீக்கியோ, திட்டியோ எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை.
ஏற்க முடியாது
அதிமுக துணை பொது செயலாளராக டிடிவி தினகரன் செல்பட முடியாது. ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று டிடிவி தினகரன் நீக்கப்பட்டு விட்டார். தேர்தல் ஆணையம் டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக ஏற்க முடியது என்று கூறியுள்ளது.
விதிகளுக்கு புறம்பானது
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதையே தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இதுவரை அங்கீகரிக்கப்படாத ஒருவர் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்படுவதும், அப்படி நியமிக்கப்பட்டவர் பணிகளில் ஈடுபடுவதும் திட்ட விதிகளுக்கு புறம்பானது.
தினகரனுக்கு தகுதியில்லை
ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளை நீக்கவோ, புதிதாக நிர்வாகிகளை நியமிக்கவோ தினகரனுக்கு எந்த வித தகுதியும் கிடையாது. ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகள் அந்தந்த பணிகளில் தொடர்கின்றனர்.
ஜெயா டிவி, நமது எம்ஜிஆர்
லட்சக்கணக்கான தொண்டர்களின் பங்களிப்பில் உருவான ஜெயா டி.வி மற்றும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் ஆகியவற்றை சட்ட ரீதியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுக்குழு கூட்டம்
அதிமுக நிர்வாகிகள் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்ட கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
கட்சி, ஆட்சியை காப்போம்
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த வேளையிலும், இனிவரும் காலங்களிலும் அதிமுகவையும், தமிழக அரசையும் காப்பாற்ற முடிந்தவை அனைத்தையும் செய்ய வேண்டும்
4 பேர் முன்மொழிந்தனர்
நான்கு தீர்மானங்களையும் நான்கு பேர் முன்மொழிந்துள்ளனர். அமைச்சர் ஜெயக்குமார், டாக்டர் வ. மைத்ரேயன்,மனோஜ்பாண்டியன்,அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் இந்த தீர்மானங்களை முன்மொழிந்துள்ளனர்.
உத்தரவுகள் செல்லாது
தினகரன் மற்றும் சசிகலாவால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் நிர்வாகிகளை நீக்கி தினகரன் வெளியிட்ட உத்தரவுகள் செல்லாது என்பதை உறுதிபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சசிகலாவினால் நியமனம் செய்யப்பட்ட செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் பதவிகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.