நீட் தேர்வில் குதிரை பேர ஆட்சி இரட்டை வேடம் போடுகிறது- ஸ்டாலின் குற்றச்சாட்டு
நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குதிரைபேர ஆட்சி இரட்டை வேடம் போடுகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை: நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை ஏமாற்றும் கபடநாடகத்தை எடப்பாடி பழனிச்சாமி அரசு நடத்துகிறது- என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி சேலத்தில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
திமுக சார்பில் தூர்வாரப்பட்ட எடப்பாடி அருகே உள்ள கச்சராயன் குளத்தை பார்வையிடவும் முடிவு செய்து இருந்தார். இதை தொடர்ந்து சேலம் செல்வதற்காக கோவைக்கு விமானம் மூலம் இன்று காலை மு.க.ஸ்டாலின் வந்தார். ஆனால் சேலம் செல்வதற்கு ஸ்டாலினுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
எனினும் கோவை வந்த ஸ்டாலினை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டு அவர் கார் மூலம் சேலத்துக்கு புறப்பட்டார். கோவை கருமத்தம்பட்டி கனியூர் டோல்கேட் அருகே மு.க.ஸ்டாலின் வந்த போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது மு.க ஸ்டாலினிடம் மனிதசங்கிலி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறி ஒரு கடிதம் கொடுத்தனர். இதனையடுத்து தடையை மீறி சேலம் செல்ல முயன்ற ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஸ்டாலின் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குதிரை பேர ஆட்சி இரட்டை வேடம் போடுகிறது என்றார்.
நீட் தேர்வு விலக்கு மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது என்றும் அந்த மசோதா குடியரசுத்தலைவருக்கே போய் சேரவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியாளர்கள் நீட் விவகாரத்தில் பொய் செல்லி கொண்டு இருக்கின்றனர் என்று அவர் கூறினார்.
தாம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சேலம், கோவை, ஈரோட்டில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறிய ஸ்டாலின், நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினார்.