சசிகலாவின் சீராய்வு மனுவுக்கு ஐடியா கொடுத்ததே 'எடப்பாடி'தானாம்... பரபர தகவல்கள்
சசிகலா சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியும் என்ற தகவலை தெரிவித்ததே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என கூறப்படுகிறது.
சென்னை: சசிகலா திடீரென சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ததன் பின்னணியில் இருப்பதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
பெங்களூரு சிறைக்கு போய் 3 மாதங்களாகிவிட்ட நிலையில் திடீரென உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் சசிகலா .1991-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றை முன்வைத்து இந்த சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.
சசி சீராய்வு மனு
முதல்வர் குற்றவாளி ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் அவருக்கே தண்டனை இல்லை என்கிற போது எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்கிறது சசிகலாவின் சீராய்வு மனு. இந்த சீராய்வு மனு தாக்கல் பின்னணியில் இருப்பதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என கூறப்படுகிறது.
அட்வகேட் ஜெனரல் ஐடியா
அண்மையில் அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு என்பதே அங்கீகாரமில்லாத வீட்டு மனைப் பிரிவு தொடர்பான வழக்குக்குதான். அப்போதுதான் சசிகலா நினைத்தால் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யலாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் முத்துக்குமாரசாமி விவரித்துள்ளார்.
எடப்பாடி பொறுப்பேற்பு
இத்தகவல் வழக்கறிஞர் ஒருவர் மூலமாக சசிகலாவுக்கு சொல்லி அனுப்பியுள்ளார் எடப்பாடியார். இது தொடர்பாக பெங்களூரு வழக்கறிஞர்களுடனும் சசிகலா ஆலோசனை நடத்தி பின்னர்தான் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டதாம். இந்த சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான செலவு முதல் அனைத்து ஏற்பாடுகளையும் தாமே ஏற்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
ஓபிஎஸ் கோஷ்டி ஆத்திரம்
இப்படித்தான் உச்சநீதிமன்றத்தில் அதிரடியாக சசிகலாவின் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டதாம். ஏற்கனவே சசிகலா, தினகரனை நீக்காத கோபத்தில் இருக்கும் ஓபிஎஸ் கோஷ்டி இத்தகவலை கேட்டு கடும் ஆத்திரத்தில் இருக்கிறதாம்.